இந்திய பிரதமருக்கான கடிதத்தின் அடைவு என்ன..! இது தமிழினத்தின் சாபக்கேடாம்
கடந்த சில வாரங்களாக தமிழர் அரசியல் புலத்தில் பெரிதும் பேசப்பட்ட ஒரு விடயமாக, சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணம் அமைந்திருந்தது.
குறித்த பயணத்தின் நிறைவில் வழமைபோலவே தமிழர் தரப்பின் எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களாகிப் போனது என்று கூறுவதே பொருத்தமாகும்.
தமிழர்களின் விருப்பப்படி அவர்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆலோசனையோடு அந்தச் சந்திப்பு பலரது எதிர்பார்ப்புகளை நீர்த்துப்போகச்செய்திருந்தது.
இந்த நிலையில் இந்தக் கடித விவகாரத்தில் கேலிக்கைக்கு உரிய விடயமாகிப்போன மூன்று தரப்புகளின் கடித நகர்வுகள், மற்றும் அதற்கான பெறுபேறுகள் தொடர்பாகவும் , தமிழர் தரப்பின் அரசியல் நிலைப்பாடு இனி எப்படி அமையப்போகிறது?
ஏன் இந்தக் கடிதங்களை ஒன்றாகக் கூடி அனுப்ப முடியவில்லை?
போன்ற கேள்விகளுக்கு, ஐபிசி தமிழின் நெற்றிக்கண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் க. பிறேமச்சந்திரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
குறிப்பாக ஒற்றுமையற்ற தன்மை தமிழ் இனத்தின் சாபக்கேடு எனவும் சிறிலங்கா அதிபர் தங்களை கேலிசெய்ததாகவும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
அதேவேளை, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழசுக்கட்சியின் இரட்டை நிலைப்பாடு வெளிப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தமிழ் மக்களிடம் மட்டுமே சமஸ்டி பற்றிப் பேசுவாதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் இந்த விடயம் தொடர்பில், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா மற்றும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.