தமிழகத்தின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் நாள்! 17-ஆவது சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்
தமிழகத்தின் அடுத்த ஐந்து ஆண்டுகளைத் தீர்மானிக்கப்போகும் 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகவுள்ளது.
கடந்த அரை நூற்றாண்டு காலமாக இரு துருவங்களாகத் தமிழகத்தை ஆண்டு வந்த திராவிட மரபிற்கும் மாற்றம் என்ற முழக்கத்துடன் சீறிப்பாயும் புதிய சக்திகளுக்கும் இடையிலான ஒரு போராட்டமாக இன்றைய தேர்தல் களம் உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில், இன்றைய தினம் விழப்போகும் வாக்குகள், வெறும் ஒரு வேட்பாளருக்கானது மட்டுமல்லாமல் அது தமிழகத்தின் அடுத்த கால் நூற்றாண்டு கால அரசியல் தத்துவத்தை யார் தீர்மானிக்கப் போகிறார்கள் என்பதற்கான பாரிய எதிர்பார்ப்பாக உருவெடுத்துள்ளது.
இதனடிப்படையில் மாநிலத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் சுமார் 5.70 கோடி வாக்காளர்கள் இன்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற உள்ளனர்.
இதற்காகத் தமிழகம் முழுவதும் 75,000 இற்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக அனல் பறந்த தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வந்ததையடுத்து இன்று மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பு, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
🛑 திமுக கூட்டணி (திராவிட முன்னேற்றக் கழகம்)
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொடரட்டும் மக்கள் பணி என்ற முழக்கத்துடன் ஆளும் திமுக கூட்டணி களம் காண்கிறது.
கடந்த ஐந்து கால ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மகளிருக்கான உரிமைத் தொகை, இலவசப் பேருந்து பயணம் மற்றும் காலை உணவுத் திட்டம் போன்ற மக்கள் நலத் திட்டங்களை முன்னிறுத்தி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் திமுக உள்ளது.
காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விசிக உள்ளிட்ட பலமான கூட்டணிக் கட்சிகள் இவர்களுடன் களம் காண்கின்றன.

🛑 அதிமுக கூட்டணி (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்)
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் அரியணை ஏறும் நோக்கில் தீவிரமாகப் போட்டியிடுகிறது.
ஆளுங்கட்சியின் மீதான விமர்சனங்கள் மற்றும் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து அதிமுக தனது பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
கடந்த கால அதிமுக ஆட்சியின் சாதனைகளை நினைவூட்டி, இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கவும் மற்றும் திராவிட அரசியலில் தனது பலத்தை நிரூபிக்கவும் இத்தேர்தலை ஒரு போர்க்களமாக அதிமுக எதிர்கொள்கிறது.

🛑 தமிழக வெற்றிக் கழகம் (தவெக)
இத்தேர்தலின் மிகப்பெரிய வருகையாகக் கருதப்படுவது நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்.
முதல் முறையாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ள விஜய், மாற்றம் என்ற ஒற்றை இலக்கை முன்னிறுத்தி இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களைப் பெரிதும் ஈர்த்துள்ளார்.
ஊழலற்ற நிர்வாகம் மற்றும் புதிய அரசியல் கலாச்சாரம் என்ற இவரது வாக்குறுதி, பாரம்பரியக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திராவிடக் கட்சிகளின் பாரம்பரிய வாக்கு வங்கியில் தவெக இம்முறை பெரிய அளவில் கைவைக்கும் என அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்படுகின்ற நிலையில் இன்று நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் விஜய்யின் வருகை ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்குமா என்பது இன்று பதிவாகும் வாக்குகளின் மூலம் உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

🛑 நாம் தமிழர் கட்சி (நாதக)
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 234 தொகுதிகளிலும் எவ்விதக் கூட்டணியும் இன்றி தனித்துப் போட்டியிடுகிறது நாம் தமிழர் கட்சி.
தமிழ் தேசியம் என்ற கொள்கையை முன்னிறுத்தி, வழக்கம்போல 117 ஆண்கள் மற்றும் 117 பெண்கள் எனச் சமமான இடங்களை வழங்கிப் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது.
கடந்த தேர்தல்களில் படிப்படியாகத் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தி வரும் இக்கட்சி, இம்முறை ஒரு தீர்க்கமான சக்தியாக உருவெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

🛑 ஆட்சி மாற்றம்
இவ்வாறு வாக்குப்பதிவு மாலை 6:00 மணி வரை இடைநில்லாமல் நடைபெறவுள்ளதுடன் மக்கள் தடையின்றி வந்து வாக்களிக்க ஏதுவாக இன்று தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளதுடன் பதற்றமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்புப் படையினரைக் குவித்துள்ளது.

தமிழக அரசியலில் பல தசாப்த காலங்களாக நீடித்து வரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கம் இன்றும் தொடருமா அல்லது புதிய சக்திகளின் எழுச்சி ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்குமா என்ற விவாதம் மக்கள் மத்தியில் தீயாகப் பரவியுள்ளது.
வெறும் வாக்குப்பதிவு என்பதையும் தாண்டி தமிழகத்தின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பில் ஒரு பெரும் ஆட்சி மாற்றத்தை எதிர்நோக்கி மக்கள் இந்தத் தேர்தலை ஒரு துருப்புச் சீட்டாகக் கருதுகின்றனர்.
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற தத்துவத்திற்கு ஏற்ப வாக்காளர்களின் மனநிலை இம்முறை யாருக்குச் சாதகமாக அமையப்போகிறது என்பதற்கான இறுதி விடை, இன்று பதிவாகும் வாக்குகள் மூலம் வரும் மே நான்காம் திகதி தெரியவரும். அன்று வெளியாகும் தீர்ப்பு, தமிழகத்தின் அடுத்த தலைமுறையை வழிநடத்தப்போகும் புதிய அரசியல் தலைமையை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |