தமிழ் அரசியல் கட்சிகள் ஓரனியாக செயல்படுங்கள் - மக்களை ஒன்றிணைத்து தமிழர் தாயகத்தில் போராட்டம்
தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு செயல்படக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை(7) மன்னாரில் மூன்றாவது நாளாகவும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் “ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்தல்”என்ற தொனிப்பொருளில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு போராட்டம்
குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வடமாகாண இணைப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் இன்று மூன்றாவது நாளாக காலை 10 மணி தொடக்கம் மதியம் 1 மணி வரை மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்கள்,கல்விமான்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கை அடங்கிய மகஜர்
குறித்த பதாகைகளில் தமிழ் அரசியல் கட்சிகள் இடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள் ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு ஒரு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்,அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள்க உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தமது கோரிக்கை அடங்கிய மகஜரை வாசித்தனர்.
குறித்த போராட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம் பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
