ஆதித்தமிழ்குடிக்கு ஏற்பட்ட அவலம்! கொந்தளிக்கும் சீமான்
அரும்பாக்கத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தி தருமாறு தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்தியுள்ளார் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அரும்பாக்கத்தில் உள்ள இராதாகிருஷ்ணன் நகரில் குடியிருப்புகளை இடித்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்குடியினரை இன்று (01) நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி அவர்கள் துயரில் பங்கெடுத்த சீமான், அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும்வரை துணைநிற்பேன் என்ற உறுதியையும் அளித்துள்ளார்.
இதன்போது ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவந்த வசிப்பிடத்திலிருந்து ஆதித்தமிழ்குடியினரை அப்புறப்படுத்துவதா? அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவதா? மண்ணின் மைந்தர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று சொல்வதா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.