உள்ளூராட்சி தேர்தலில் மான் சின்னத்தில் களமிறங்கும் தமிழ் மக்கள் கூட்டணி
தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து மான் சின்னத்திலேயே போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணி ஆராய்ந்து முடிவெடுத்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அழைத்ததன் பேரில் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது பற்றி எமது கட்சியால் ஆராயப்பட்டது.
மான் சின்னம்
முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா பொதுஜனபெரமுனவும் கூட்டாக தேர்தலில் போட்டியிட்ட போது சில மாவட்டங்களில் யானை சின்னத்திலும் (ஐ.தே.கட்சியின் தேர்தல் சின்னம்) வேறு சில மாவட்டங்களில் தாமரை மொட்டு சின்னத்திலும் (ஸ்ரீ.பொ.பெ யின் தேர்தல் சின்னம்) இன்னும் சிலவற்றில் பொது சின்னமொன்றிலும் போட்டியிட முடிவெடுத்தன.
அது போல் எமது தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமல் ஒரு போட்டி தவிர்க்கும் ஏற்பாட்டினை எட்ட முடியுமா என்று ஆராயப்பட்டது.
எனினும் அவ்வாறான ஏற்பாட்டுக்கு இடம் இல்லை என்று தெரியவந்தது.
தமிழ்த் தேசிய நலனின் அடிப்படையிலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அட்சர கணித முறையின் அடிப்படையிலும் தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்து மான் சின்னத்திலேயே போட்டியிடும் என்ற முடிவுக்கு வந்திருப்பதை மக்களுக்கு அறியத் தருகின்றேன்.”
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே… 5 நாட்கள் முன்
