விடுதலைக்காக காத்திருக்கும் அரசியல் கைதி ஆனந்த சுதாகர்: அவலம் சுமந்து வாழும் பிள்ளைகள்
தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகர் விடுதலை பெற்று வீடு திரும்பி தனது பிள்ளைகளை அரவணைத்து பாதுகாக்க தமிழ்ச் சமூகமாக நாம் வழிசமைக்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் என்பவர், கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 17 ஆண்டு காலங்களாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக தென்னிலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.
கணவரது ஆயுள் தண்டனைத் தீர்ப்பையும் அவரது நீண்ட பிரிவையும் தாங்கவியலாது நோயுற்ற அவரது துணைவியார் கடந்த 2018 ஆம் ஆண்டு இயற்கை மரணம் எய்தினார்.
அரசியல் கைதி விடுதலை
ஆனந்தசுதாகரின் மனைவி உயிரிழந்த நிலையில் அவரின் பிள்ளைகள் இருவரும் பேர்த்தியாரின் (தாயாரின் தாய்) பராமரிப்பில் இருந்தனர்.

இந்தநிலையில், அவர்களின் பேர்த்தியாரான தேவதாஸ் கமலா (வயது 75) நோயால் நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் காலமானார். இதனால் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் இருவரும் மீண்டும் அநாதரவாய் உள்ளனர்.
இந்த நிலையில் “சமூக அக்கறை கொண்ட அந்தத் தாயாரின் ஆத்மா சாந்தியுற வேண்டுமாக இருந்தால் ஒட்டுமொத்த உறவுகளையும் இழந்து அவலம் சுமந்து வாழ்கின்ற பள்ளி பிஞ்சுகளின் தந்தையான அரசியல் கைதி ஆனந்த சுதாகர் விடுதலை பெற்று வீடு திரும்பி அந்தக் குழந்தைகளை அரவணைத்து பாதுகாப்பதற்கு தமிழ்ச் சமூகமாக நாம் வழிசமைக்க வேண்டும் என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனந்தசுதாகரனின் மனைவி உயிரிழந்த நிலையில் , இறுதி சடங்கில் கலந்து கொள்ள சிறைச்சாலை வாகனத்தில் ஆனந்த சுதாகரன் அழைத்து வரப்பட்டு , மீண்டும் சிறைக்கு அழைத்து செல்ல தயாரான போது அவரது மகளும் அப்பாவுடன் செல்ல போகிறேன் என கூறி சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |