விடுதலைக்காக காத்திருக்கும் அரசியல் கைதி ஆனந்த சுதாகர்: அவலம் சுமந்து வாழும் பிள்ளைகள்
தமிழ் அரசியல் கைதி ஆனந்த சுதாகர் விடுதலை பெற்று வீடு திரும்பி தனது பிள்ளைகளை அரவணைத்து பாதுகாக்க தமிழ்ச் சமூகமாக நாம் வழிசமைக்க வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான சச்சிதானந்தன் ஆனந்தசுதாகர் என்பவர், கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 17 ஆண்டு காலங்களாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியாக தென்னிலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்.
கணவரது ஆயுள் தண்டனைத் தீர்ப்பையும் அவரது நீண்ட பிரிவையும் தாங்கவியலாது நோயுற்ற அவரது துணைவியார் கடந்த 2018 ஆம் ஆண்டு இயற்கை மரணம் எய்தினார்.
அரசியல் கைதி விடுதலை
ஆனந்தசுதாகரின் மனைவி உயிரிழந்த நிலையில் அவரின் பிள்ளைகள் இருவரும் பேர்த்தியாரின் (தாயாரின் தாய்) பராமரிப்பில் இருந்தனர்.

இந்தநிலையில், அவர்களின் பேர்த்தியாரான தேவதாஸ் கமலா (வயது 75) நோயால் நேற்று முன்தினம் இரவு கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் காலமானார். இதனால் ஆனந்தசுதாகரின் பிள்ளைகள் இருவரும் மீண்டும் அநாதரவாய் உள்ளனர்.
இந்த நிலையில் “சமூக அக்கறை கொண்ட அந்தத் தாயாரின் ஆத்மா சாந்தியுற வேண்டுமாக இருந்தால் ஒட்டுமொத்த உறவுகளையும் இழந்து அவலம் சுமந்து வாழ்கின்ற பள்ளி பிஞ்சுகளின் தந்தையான அரசியல் கைதி ஆனந்த சுதாகர் விடுதலை பெற்று வீடு திரும்பி அந்தக் குழந்தைகளை அரவணைத்து பாதுகாப்பதற்கு தமிழ்ச் சமூகமாக நாம் வழிசமைக்க வேண்டும் என்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக போராடும் குரலற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனந்தசுதாகரனின் மனைவி உயிரிழந்த நிலையில் , இறுதி சடங்கில் கலந்து கொள்ள சிறைச்சாலை வாகனத்தில் ஆனந்த சுதாகரன் அழைத்து வரப்பட்டு , மீண்டும் சிறைக்கு அழைத்து செல்ல தயாரான போது அவரது மகளும் அப்பாவுடன் செல்ல போகிறேன் என கூறி சிறைச்சாலை வாகனத்தில் ஏறிய ஒளிப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
கடந்த 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி 15. மார்ச் 2018 ஆம் திகதி சுகயீனம் காரணமாக மரணமடைந்திருந்தார்.
இந்நிலையில் மனைவியி்ன் இறுதி நிகழ்வுகள் நேற்று கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் நடைபெற்றது.
மனைவியின் இறுதி நிகழ்வுக்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆனந்தசுதாகர் அழைத்து செல்லப்பட்டு மூன்று மணித்தியாலயங்கள் மனைவியின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பின்னர் வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். இவ்வாறான சூழ்நிலையில் சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன் தொடர்பான தகவல் சர்வதேச ரீதியில் பேசுபொருளானது.
“2007 ஆம் ஆண்டு கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் உள்ள இலங்கை இராணுவத்தின் முக்கிய இலக்கொன்று விடுதலைப் புலிகளால் குறி வைக்கப்படுகின்றது.
புலனாய்வு போராளிகளின் சரியான தகவல்களுடன், கரும்புலிகளின் தாக்குதல் படையணியின் உதவியுடன், அந்த தாக்குதலுக்கான நேரம் குறிக்கப்படுகிறது.
தாக்குதல் நேரம் 9 மணி 20 நிமிடம் தொடக்கம் 10 மணி 20 நிமிடம் வரையாகும். குறிப்பிட்ட நேரத்தில் தாக்குதல் மிகக் கச்சிதமாக நடத்தப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உதவியாக இருந்தார், திட்டங்களை வகுத்தார், வெடிபொருட்களை நகர்த்தினார் என்றும், விடுதலைப் புலிகளின் இயக்கத்தில் 10 வருடத்திற்கும் அதிக காலம் அங்கம் வகித்தார் என்றும், இன்னும் பல பயங்கரவாத குற்றச் செயல்களின் கீழும் சந்தேக நபராக தேடப்பட்ட ஆனந்த சுதாகரன் 2008 ஆம் ஆண்டு கைது செய்யப்படுகிறார்.
கைது செய்யப்பட்ட தருணத்தில் ஆனந்த சுதாகரன் வயது 27 நிரம்பியவராகவும், இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருந்தார்.
இவர் செய்ததாக கூறப்பட்ட குற்றங்களுக்கு எதிராக எந்தவிதமான சரியான சாட்சிகளோ, ஆதாரங்களோ நீதிமன்றத்தில் காவல்துறையால் நிறுத்தப்படவில்லை என சமூக அமைப்புக்கள் குற்றம் சுமத்துகின்றன.
2017 நவம்பர் மாதம் 8 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தின் 8 ஆம் இலக்க அறையில், வழக்கு இலக்கம் HC6656-13 மீது நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளிக்கிறார்.
சுதாகரன் உட்பட மேலும் 2 பேருக்கு ஆயுட்கால தீர்ப்பளித்த நீதிபதி அன்றைய தினம் ஓய்வு பெற்றுச் சென்றார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
மனைவியான யோகராணி ஆனந்த சுதாகரன் (36 வயது) உடல் நலக் குறைவால் கடந்த 15. மார்ச் 2018 ஆம் திகதி காலமானார்.
சாதாரண ஆஸ்துமா நோயாளியான அவர் தனது கணவருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு பின்னர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அதிக யோசனை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தினால் மிக அதிகமாக பாதிப்படைந்தார்.
அதன்தாக்கமே அவரை மரணம் வரை கொண்டு சென்றது. மரண சடங்குகள் முடிந்த பின்னர் மூத்த மகன் மயானத்திற்கு கொள்ளி வைப்பதற்காக சென்ற வேளை அரசியல் கைதியான சுதாகரன் மீண்டும் சிறைக்கு திரும்பவதற்காக சிறைச்சாலை வாகனத்தில் ஏறினார்.
அவ்வேளை, யாரும் சற்று எதிர்பார்க்காத விதமாக அவரது 10 வயது நிரம்பிய மகளும் சிறைச்சாலை வாகனத்திற்குள் ஏறிவிட்டார்.
தந்தையின் சிறைச்சாலை வாகனத்தில் அவரது மகள் ஏறியமை அனைவரதும் மனத்தை நெகிழ வைத்திருந்தது.
சுதாகரின் மகளை சிறைச்சாலை அதிகாரிகள் பிடித்து கீழிறக்கும் போது ஒன்றுமே அறியாத அந்த குழந்தை தன் தந்தையை பார்த்து “அப்பா நாளை மறுதினம் மீண்டும் வருவீர்களா அப்பா” என சுதாகரிடம் கேட்டது கொடுமையின் உச்சகட்ட நிமிடமாக உணரப்பட்டதாக அப்போதைய தமிழ் ஊடகங்கள் விளக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 23 மணி நேரம் முன்