யாழ். திரும்பிய 74 வயது அகதியின் கைது - சாடும் பிமல் ரத்நாயக்க
சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களை கைது செய்ய பயன்படுத்தப்படும் சட்டத்தின் கீழ் தான் தமிழ்நாடு அகதி முகாமிலிருந்து தாயகம் திரும்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு அகதியாக சென்று நாடு திரும்பிய 74 வயதான சின்னையா சிவலோகநாதன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தமிழ்மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், குறித்த கைது தொடர்பில் தனது சமூக ஊடக பதிவில் கருத்து வெளியிடுகையிலேயே பிமல் ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை மாற்ற முயற்சி
அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் சட்டத்தின் அடிப்படையிலேயே தமிழக அகதி முகாமிலிருந்து நாடு திரும்பிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொடர்புபட்டவர்கள் இது குறித்து செயல்பட்டிருந்தால் யுத்தத்தின் பின்னர் இந்த சட்டத்தை மாற்றியிருக்கலாம். அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) உடன் கதைத்தேன்.
அவர் இந்த சட்டத்தை மாற்றுவதாக தெரிவித்துள்ளார். இது அரசாங்கத்தின் கொள்கையில்லை. நாட்டின் பழைய சட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நானும் அமைச்சர் சந்திரசேகரும் 2007, 2008 இல் அந்த அகதி முகாம்களுக்கு பயணம் மேற்கொண்டிருந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
