தமிழர் பிரதேச காணி அபகரிப்புக்கு எதிராக அதிபர் அதிரடி உத்தரவு..!
முல்லைத்தீவு - கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் செய்கின்ற 229 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு வலியுறுத்தி அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கைக்கு அமைவாகவே அதிபர் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு - கரைத்துறைபற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தண்ணிமுறிப்பு கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் செய்கின்ற 229 ஏக்கர் காணியை தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் தொல்பொருள் திணைக்களத்திற்கு சுவீகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
எழுத்துப்பூர்வமான கடிதம்
இந்நிலையில் அக்காணிகளை அளவீடு செய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கு எழுத்துப்பூர்வமான பணிப்புரையை விடுத்துள்ளார்.
இக்கடிதம் தொடர்பில் இன்று காலை நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை நேரடியாக சந்தித்து இந்நடவடிக்கையை உடனடியாக இரத்துசெய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கமைவாக காணி அளவீட்டு பணிகளை உடனடியாக இரத்துசெய்யுமாறு அதிபர் செயலகத்தில் இருந்து எழுத்துப்பூர்வமான கடிதம் முல்லைத்தீவு மாவட்ட தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


