காணி விடுவிப்பு தொடர்பிலான கூட்டத்தை புறக்கணித்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மன்னார் மாவட்டத்தில் வனவள திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள, காணிகள் விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.
உரிய விதத்திலும் உரிய நேரத்திலும் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை எனவும் கூட்டங்களில் தங்களது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரசதரப்பு அரசியல் பிரதிநிதிகள் வாய்ப்பு வழங்குவதில்லை எனவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதிபர் செயலகத்தின் பிரதி நிதிகள்,வனவள திணைக்கள பிரதிநிதிகள், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் பங்கு பற்றுதலுடன் இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கி கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பிலும் அவை விடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டம் ஏற்கனவே காணி விடுவிப்பு தொடர்பில் உயர் மட்டங்களால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை தொடர்பில் தெரியப்படுத்துவதற்கான கூட்டமாகவே காணப்பட்டது.

அதேநேரம் உள்ளூர் அரச பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பிலும் இறுதியான விடுவிப்பு தொடர்பிலும் எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் கலந்துரையாடப்பட்ட விடயங்களை மேலதிக அனுமதிக்காக அனுப்பிவைப்பதற்கான தீர்மானமே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த கூட்டத்திற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்ட போதிலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு எந்தப் பயனும் இல்லை என்ற அடிப்படையில் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.