செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!
தமிழ்நாடு மதுபானசாலை (TASMAC) ஊழல் வழக்கு தொடர்பாகத் திமுக முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றம் இன்று (30-07-2026) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இவ்வழக்கில் அரசுக்கு பாரிய நிதி இழப்பை ஏற்படுத்தியதாகச் செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணை
இந்தநிலையில் அவரைப் காவல்துறை விசாரணை செய்ய வேண்டியது அவசியமானது என நீதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கரூர் உள்ளிட்ட பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (DVAC) செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் சோதனைகளை நடத்திய அடுத்த நாளே நீதிமன்றத்தின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளாகச் செயற்பட்ட அதிகாரிகள், தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றங்களைச் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு தமிழ்நாட்டு இலஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்துள்ள முறைப்பாட்டில், மதுபானசாலைகள் மற்றும் போக்குவரத்து கேள்வி பத்திரங்களை தங்களுக்குச் சாதகமாக முறைகேடு செய்து, குறிப்பிட்ட மதுபான உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாகச் செயற்பட்டதன் மூலம் மதுபானங்களின் விலையை உயர்த்தி அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வழக்குப்பதிவு
இந்தநிலையில் செந்தில் பாலாஜி, முன்னாள் மதுபானசாலை மேலாண்மை இயக்குநர் எஸ். விசாகன் உட்பட ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கார்த்திக் (என்ற முலானூர் கார்த்திக்) என்பவரின் கட்டுப்பாட்டில் இயங்கிய கரூர் கேங் என்ற கூட்டமைப்பு, கரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் கட்டுப்படுத்தியதுடன், தமிழ்நாடு முழுவதுமுள்ள மதுபானசாலை உரிமங்களைத் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒதுக்குமாறு அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அததோடு மதுபானசாலைகள் சில்லறை விற்பனைக் கடைகளில் சாதாரணமாக நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட (MRP) ரூபாய் 10 முதல் ரூபாய் 100 வரையிலும், வெளிநாட்டு மதுபானங்களுக்கு ரூபாய் 500 வரையிலும் சட்டவிரோதமாகக் கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டு லஞ்சமாகக் கைமாற்றப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியத் தண்டனைச் சட்டம், பாரதிய நியாய சன்ஹிதா (BNS 2023) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி கைது செய்யப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |