வடக்கில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை : ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு
வடக்கு மாகாண (Northern Province) கல்வியில் பாரிய பிரச்சினையாக இருப்பது ஆசிரியர் பற்றாக்குறையே என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (CTU) பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் முறையான நடவடிக்கையையும் எதனையும் முன்னெடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ”நாடளாவிய ரீதியில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் அரச துறையில் 30 ஆயிரம் பேரை மாத்திரம் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் 10,000 மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளது.
அதேநேரம், வட மாகாணத்திலுள்ள கஷ்ட பிரதேச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இடமாற்ற விடயத்தில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். இதனைத் தீர்ப்பதற்கு முறையான இடமாற்றம் ஒன்று அவசியமாகும்.
வட மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் 10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதில் சிக்கல் காணப்படுகின்றது.
அத்துடன் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட 6000 ரூபா கொடுப்பனவினை கஸ்டப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
