வெற்று சவடால்களுக்கு அஞ்ச மாட்டோம் : இலங்கை தமிழரசு கட்சிக்கு ரெலோ பதிலடி
ஆணவத்தை விடுத்து அரவணைப்பே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நெறிப்படுத்தும் தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்ப்பத்தையும் கோட்டை விடுகிறது தமிழரசுக் கட்சி என செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியுடனான சந்திப்பு தொடர்பில் ரெலோ வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்ப்பட்டுள்ளதாவது,
உதாசீனப்படுத்திய தமிழரசுக்கட்சி
வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியத் தரப்பாக ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்கு பல தடவைகள் தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எடுத்துக்கொண்ட முயற்சிகள் உதாசீனப்படுத்தப்பட்டன. இதன்பின் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையிலான கொள்கை ரீதியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இது சாதாரணமாக ஏற்படுத்தப் படவில்லை. பல விட்டுக்கொடுப்புகள் அரவணைப்புகளின் அடிப்படையில் தான் சாத்தியமானது.
இதன் பின் தோன்றிய அரசியல் சூழ்நிலை மாற்றங்களில் வன்னி நிலப்பரப்பில் தமிழ் தேசிய கட்சிகளின் கைகளில் சபைகளை வலுப்படுத்துகின்ற நிலைப்பாடு பற்றி பேசவே நாங்கள் அழைக்கப்பட்டோம்.
அதன் பிரகாரம் திங்கள் மதியம் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி வி கே சிவஞானம் அலுவலகத்தில் அக்கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனுடன் சந்திப்பு நடைபெற்றது.
சுமந்திரனின் அறிவிப்பு
அதன்போது வன்னியின் அரசியல் சூழ்நிலை பற்றி கலந்துரையாட முற்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறதோ அதற்கான பதில் நடவடிக்கை வன்னியில் அமையுமென தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் தெரிவித்தார்.
உங்கள் கருத்துக்கள் பயனற்றவை. வன்னியில் அதிக சபைகளை ஆளும் தரப்பு கைப்பற்றும் நிலை காணப்படுகிறது. பல சபைகளில் தனி ஒரு கட்சியாக அவர்கள் ஆசனங்களை பெற்றுள்ளார்கள். தமிழ் தேசியப் பரப்பினர் இணைந்து செயலாற்றாது விட்டால் இந்த சபைகளை ஆளும் தரப்பிடம் இழக்க வேண்டிய சூழ்நிலை வரும். மேலும், கிழக்கு மாகாணத்தில் மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளை தோற்றுவிக்கும் எனவும் தெரிவித்தோம்.
இன்னும் காலம் பிந்தவில்லை. தமிழ் தேசிய பரப்பினர் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்போடு வடக்கு கிழக்கில் அனைத்து சபைகளையும் அமைப்பதற்கான முயற்சியை செய்ய முடியும். அதை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்தோம். ஆனாலும் இணக்கமான சூழ்நிலைக்கு பதிலாக வறட்டு சவடால்களே பதிலாகின.
தலைமைகளின் வறட்டு கௌரவம் தடையாக இருக்கக் கூடாது
தனிமனித வீர வசனங்களால் எமது இனத்தினை நேர்த்தியான பாதையில் வழி நடத்த முடியாது. மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று தமிழ்த் தேசியப் பரப்பினர் ஒன்று கூடி ஆட்சியை கைப்பற்றுவதே மக்கள் எதிர்பார்ப்பு. அதை செய்வதற்கு விட்டுக்கொடுப்பு, அரவணைப்பு என்பன மிக அவசியம். தலைமைகளின் வறட்டு கௌரவம் இதற்கு தடையாக இருக்கக் கூடாது.
எப்பொழுதும் ஒற்றுமைக்காகவே ரெலோ பாடுபட்டு வந்துள்ளது. அதில் மிகுந்த நம்பிக்கையும் கொண்டவர்கள் நாங்கள். அதை தவறாக புரிந்து கொண்டு வீர வசனங்கள் பேசுவதில் அர்த்தம் இல்லை. வெட்டிச் சவடால்களுக்கு நாங்கள் ஒருபொழுதும் இடமளியோம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
