செம்மணி போராட்டத்தில் பதற்றம் : விரட்டியடிக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம்
யாழ். செம்மணியில் இடம்பெற்று வரும் மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டிய “அணையா விளக்கு“ இறுதி நாள் போராட்டத்தில் கடும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டக் களத்திற்கு வருகை தந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானத்துடன் (C. V. K. Sivagnanam) போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சிலர் முரண்பட ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்து பொதுமக்கள் சீற்றமடைந்ததனர்.
அத்துடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் சி.வி.கே சிவஞானத்தை ஒருமையில் விழித்து கூச்சலிட்டு அந்தப் பகுதியில் இருந்து வெளியில் செல்லுமாறு கோரி முரண்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து போராட்டக் களத்தில் இருந்து சி.வி.கே சிவஞானம் உள்ளிட்ட சிலர் வெளியேறிச் சென்றுள்ளனர்.
இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் (R.Shanakiyan) உள்ளிட்டோர் போராட்டக் களத்திற்கு வருகை தந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவருடனும் முரண்பட ஆரம்பித்துள்ளனர்.
இதனையடுத்து போராட்டக் களத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட சிலர் வெளியேறிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |












