பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்! மனோ கணேசன் கோரிக்கை
பயங்கரவாத தடை சட்டம் திருத்தப்படுவதைக் காட்டிலும், அது முற்றாக நீக்கப்பட வேண்டியதே தற்போதைய அவசியம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் (Mano Ganesan) தெரிவித்துள்ளார்.
“ஐ.நா மனித உரிமை ஆணையகத்தை, ஐரோப்பிய ஜிஎஸ்பியை" நோக்கி இதை அரசாங்கம் வேறு வழியில்லாமல் செய்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டம் மீள் திருத்தப்படும் வர்த்தமானி பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் தனது பதிவில்,
இதன்படி தற்போதிருக்கின்ற சட்டத்தின்படி தடுத்து வைத்தல் உத்தரவின் கீழ் உள்ள 18 மாத தடுப்புக் காவல் காலம், 12 மாதங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டவரைச் சட்டத்தரணிகள் அணுகுவதற்கும் வழி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேக நபர் தமது உறவினர்களுடன் தொடர்பு கொள்ளவும், அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு நீதிவான் ஒருவர் விஜயம் செய்து, அவர் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்கான வாய்ப்புகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
மேலும் சந்தேக நபர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காகச் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்கான திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சி என்றபோதும், அதனையும் ஒரு முன்னேற்றமாகவே தாம் கருதுகின்றோம்.
எவ்வாறாயினும், யுத்தம் நிறைவடைந்து 10 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்ட சூழ்நிலையில் இந்த சட்டம் அவசியம் இல்லை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.