இன்று அதிகாலை கட்டுநாயக்கவில் கைதான வெளிநாட்டு பிரஜை
79 மில்லியன் ரூபா பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான (Colombo Bandaranaike International Airport) நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (19.05.2025) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தாய்லாந்தைச் (Thailand) சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், “குறித்த போதைப்பொருள் தாய்லாந்தில் கொள்வனவு செய்து, மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்று, அங்கிருந்து மலேசிய எயார் லைன்ஸ் விமானம் MH-179 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணப் பையில் இனிப்புகளுடன் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிலோகிராம் 910 கிராம் 'குஷ்' போதைப்பொருளே இவ்வாறு சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைதான சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
