தீவிர மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறையால் நோயாளர்கள் அவதி: வவுனியா பொது மருத்துவமனையின் நிலை
வடக்கு மாகாணத்திற்குச் சேவையாற்றும் முக்கிய மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனைகளில் ஒன்றான வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையில் நிலவும் தீவிர மயக்கவியல் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பற்றாக்குறை தொடர்பில் சுகாதார துறைசார்ந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன், இதற்கு உடனடியாக நிலையான தீர்வை வழங்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களாக இம்மருத்துவமனை ஒரேயொரு மயக்கவியல் நிபுணருடன் (Consultant Anaesthetist) மட்டுமே இயங்கி வருவதாகச் சுகாதார துறைசார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஒரேயொரு நிபுணத்துவ மருத்துவரே அவசர மற்றும் விபத்து சிகிச்சை அறுவை கூடங்கள், பல துறைகளின் வழக்கமான அறுவைக்கூடங்கள், எலும்பியல் அறுவை கூடம், தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) சேவைகள், முதன்மை PCI (Primary PCI) உள்ளிட்ட இதய கதீட்டராக்கம் (Cardiac Catheterisation) மற்றும் பிற சிகிச்சை முறைகளுக்கான மயக்கவியல் ஆதரவு ஆகிய அனைத்தையும் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.
இதன் விளைவாக வழக்கமான அறுவை சிகிச்சை சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், பின்வரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார துறைசார்ந்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புற்றுநோய் அறுவை சிகிச்சைகள், வேதனை தணிப்பு சிகிச்சைகள் (palliative procedures) மற்றும் அவசர காயங்களுக்கான அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்கப்படுகின்றன.
காது-மூக்கு-தொண்டை (ENT), வாய் மற்றும் முகச்சீரமைப்பு (OMF), மகப்பேறு மற்றும் பெண்நோயியல் (Gynaecological), எலும்பியல் (Orthopaedic) மற்றும் சிறுநீரக மண்டல சிகிச்சைகளுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளது.
அவசர நிலைகளில் நோயாளர்கள் யாழ்ப்பாணம் அல்லது அனுராதபுரம் போதனா மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதேவேளை, மருத்துவமனையில் ஒரேயொரு அறுவை சிகிச்சை நிபுணரே (Consultant Surgeon) விபத்து சேவை, அவசர மற்றும் வழக்கமான அறுவை கூடங்கள், வார்ட் பராமரிப்பு மற்றும் அழைப்புப் பணி (On-call) ஆகிய பொறுப்புகளை கவனித்து வருவதால், அறுவை சிகிச்சை பராமரிப்புகளில் கடும் தாமதம் நிலவுகிறது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டும் தற்காலிக ஏற்பாடுகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், வவுனியா மாவட்ட பொது மருத்துவமனையை நம்பியிருக்கும் மக்களின் நலன் கருதி, நிலவும் மயக்கவியல் நிபுணர் பற்றாக்குறைக்கு உடனடி மற்றும் நிலையான தீர்வை வழங்குமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளிடம் அவசரமாகக் கோரிக்கை விடுக்கின்றனர்.
வடக்கு மாகாணத்தில் 80 உத்தியோகத்தர்களை பணிநீக்கம் செய்யச் சதி - உயர் அதிகாரிகள் மீது கடும் விமர்சனம்!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |