ஒரு பத்திரிகையாளருக்கு கோட்டாபய விடுத்த மிரட்டல் கதை
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தொலைபேசி உரையாடல் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகிய நிலையில் அது குறித்த முறைப்படும் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டது.
இது அவரது இராணுவ பதவி விலகல் தொடர்பில் சர்ச்சையை கிளப்பும் ஒரு உரையாடலாக காணப்பட்டது.
ஆனால் இதே போல ஒரு உரையாடல் 2012 ஆம் ஆண்டு இலங்கையின் அரசியல் மற்றும் ஊடக உலகில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய ஒரு சம்பவம், அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை மையமாகக் கொண்டு உருவானது.
இலங்கைக்கு ஒரு நாய்க்குட்டி
இது சூரிச்சிலிருந்து (Zurich) இலங்கைக்கு ஒரு நாய்க்குட்டியை கொண்டு வருவதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இயக்கத்தில் மாற்றம் செய்ய முயற்சிக்கப்பட்டதாக The Sunday Leader நாளிதழ் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தியின்படி, முதலில் A340 வகை விமானம் இயக்கப்பட இருந்த நிலையில், A330 விமானமாக மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டதாக கூறப்பட்டது.
A330 விமானத்தை மட்டுமே இயக்கத் தகுதி பெற்றிருந்த விமானி கேப்டன் பிரவீன் விஜேசிங்க பயணத்தை மேற்கொள்ளும் வகையில் இந்த மாற்றம் பரிசீலிக்கப்பட்டதாகவும், இதனால் பல பயணிகளுக்கு இடமின்மை ஏற்பட்டு விமான நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் பெற The Sunday Leader ஆசிரியர் குழு கோட்டாபய ராஜபக்சவை தொலைபேசியில் தொடர்புகொண்டது.
அப்போது, தனது மனைவிக்காக நாய்க்குட்டி ஒன்று கொண்டு வரப்படுவதை அவர் மறுக்கவில்லை. அதற்கான சரக்குக் கட்டணத்தை தாமே செலுத்துவதாகவும், தனிப்பட்ட பொருட்களை விமான சரக்காக கொண்டு வருவதில் தவறு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டது.
ஆனால், விமானம் மாற்றப்பட்டதாக கூறப்படும் தகவலை அவர் நிராகரித்தார். இதுதொடர்பான கேள்விகளை செய்தியாளர் தொடர்ந்து எழுப்பியபோது, அவர் கடும் கோபமடைந்து செய்தி வெளியிட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றும், நாளிதழுக்கும் செய்தியாளருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்ததாக அந்த நாளிதழ் தெரிவித்தது.
கடுமையான வாக்குவாதம்
செய்தியில் வெளியிடப்பட்ட விவரங்களின்படி, உரையாடல் முன்னேறியபோது இரு தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. செய்தியாளர், பொதுநலன் கருதி விளக்கம் பெறுவதற்காகவே தொடர்புகொண்டதாக கூறியபோதும், கோட்டாபய ராஜபக்ச ஊடகத்தின் நோக்கத்தை விமர்சித்ததுடன், செய்தி வெளியிடப்பட்டால் அதற்கு கடுமையான சட்ட மற்றும் தனிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என எச்சரித்ததாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற மற்றொரு தொலைபேசி உரையாடலிலும், விமானத்தை மாற்றுவதற்கான உத்தரவை தாம் வழங்கவில்லை என்றும், அத்தகைய முடிவு எடுக்கப்பட்டிருந்தால் அது தமக்குத் தெரியாமலேயே நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறியதாக The Sunday Leader செய்தி வெளியிட்டது.
இருப்பினும், செய்தியாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் மீண்டும் ஆவேசமாக நடந்துகொண்டதாகவும், ஊடகங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் அச்செய்தி குறிப்பிட்டது.
இதற்கிடையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன, விமான ஒதுக்கீடு மற்றும் விமான வகை மாற்றம் போன்ற முடிவுகள் பயணிகள் எண்ணிக்கை, செயற்பாட்டு தேவைகள் மற்றும் வணிகக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுவதாக விளக்கம் அளித்தார்.
நாய்க்குட்டி தொடர்பான குற்றச்சாட்டில் அவர் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை. சம்பவத்தில் பெயர் குறிப்பிடப்பட்ட கேப்டன் பிரவீன் விஜேசிங்க, பயணத்தின் முதல் கட்டத்தை மட்டுமே இயக்க இருந்ததாகவும், A340 விமானத்தை இயக்கும் தகுதி தமக்கு இல்லை என்றும் தெரிவித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டது.
மேலும், நாய்க்குட்டியை கொண்டு வருவது குறித்து முன்கூட்டியே தனக்குத் தகவல் இல்லை என்றும் அவர் கூறியதாக அச்செய்தி தெரிவித்தது.
ஊடகங்கள் எதிர்கொள்ளும் அழுத்தம்
இந்தச் சம்பவம் அப்போது அரசியல் அதிகாரத்தின் பயன்பாடு, அரச நிறுவனங்களில் அரசியல் செல்வாக்கு, அரச வளங்களின் பயன்பாடு மற்றும் ஊடகச் சுதந்திரம் குறித்து இலங்கை முழுவதும் தீவிரமான விவாதங்களை ஏற்படுத்தியது.
குறிப்பாக, அதிகாரத்தில் உள்ளவர்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்தும் இந்த விவகாரம் பரவலாக பேசப்பட்டது.
இந்தத் தொலைபேசி உரையாடல் 2012 ஜூலை 5ஆம் திகதி நடைபெற்றது. இதில் சில இடங்களில் ஆபாச சொற்கள் பயன்படுத்தப்பட்டதாக அந்த பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
FJ: ராஜபக்ச அவர்களே! இதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா தெரியாதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த வெள்ளிக்கிழமை சூரிச்சுக்கு செல்லவுள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், உங்களுக்காக ஒரு நாய்க்குட்டியை கொண்டு வரப் போகிறது என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
GR: அதில் என்ன தவறு? அந்த நாளுக்குத் திட்டமிடப்பட்ட விமானம்தானே அது. ஆம், அவர்கள் ஒரு நாய்க்குட்டியை கொண்டு வருகிறார்கள். அது என் மனைவிக்காக. அதில் எந்தத் தவறும் இல்லை. நாயல்ல, யானையாயிருந்தாலும் அதை கொண்டு வர எனக்கு முழு உரிமை இருக்கிறது. அதற்கான செலவை நானே செலுத்துகிறேன். என்ன வேண்டுமானாலும் கொண்டு வர எனக்கு உரிமை உண்டு. இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் அவர்கள் எனக்கு ஒரு நாய்க்குட்டியை கொண்டு வந்திருக்கிறார்கள். இதில் என்ன தவறு? விமானத்திற்கான செலவை நானே கொடுத்துள்ளேன். எனக்கு முழு உரிமை இருக்கிறது.
FJ: உண்மையில், அது பிரச்சினையல்ல. ஆனால், கேப்டன் பிரவீன் விஜேசிங்க தானே சூரிச்சுக்குப் பறந்து அந்த நாய்க்குட்டியை கொண்டு வர முன்வந்துள்ளார் என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
GR: ஆம். அதில் என்ன? அவர் என் நண்பர். முன்னாள் விமானப்படை அதிகாரிகள் பலர் இப்போது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பணியாற்றுகிறார்கள். அவர்களில் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்கிறார்கள். அதில் என்ன தவறு?
FJ: ஆனால், A340 விமானத்தை இயக்குவதற்கு இந்த விமானிக்கு தகுதி இல்லை. அதனால், அவர் இயக்கக்கூடிய A330 விமானத்தை மாற்றிப் பயன்படுத்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மீது ஆரம்பத்தில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
GR: இல்லை. விமானம் மாற்றப்படவில்லை.
FJ: அது மாற்றப்படாததற்குக் காரணம், விமானிகள் சங்கத் தலைவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான்.
மோசமான ஆபாச வார்த்தை
GR: யாரும் எதிர்க்கவில்லை. இதைப் பற்றி ஒரு அவதூறு வார்த்தையாவது நீங்கள் எழுதினால், நான் உங்கள்மீது வழக்கு தொடருவேன். எந்த நீதிமன்றத்துக்கும் நான் பயப்பட மாட்டேன். ஏற்கனவே உங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளேன். மீண்டும் தொடருவேன். அது என் உரிமை.
FJ: ஆம். அதேபோல, ஒரு பத்திரிகையாளராக, உங்களைச் சார்ந்த இந்த விவகாரத்தில் உங்கள் தரப்பையும் அறிந்து கொள்ள எனக்கும் உரிமை இருக்கிறது.
GR: அதைப் போய் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிடம் கேளுங்கள்.
FJ: நாங்கள் ஏற்கனவே அவர்களிடம் பேசியுள்ளோம். எப்படியாயினும், விமானத்தின் அழுத்த அமைப்பைப் பற்றி தெரிந்த எந்த விமானியும் ஒரு நாய்க்குட்டியை கொண்டு வர முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் பிரச்சினை என்னவென்றால், அந்த விமானத்தை இயக்கத் தகுதியில்லாத கேப்டன் பிரவீன் விஜேசிங்கவே அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
GR: அதில் என்ன? அவர் இயக்கியிருந்தால் என்ன தவறு? நான் சொல்கிறேன்... இதைப் பற்றி ஒரு அவதூறு வார்த்தையாவது எழுதியிருந்தால், உங்கள் [ஆபாசச் சொல்] பத்திரிகைக்கு எதிராக நான் வழக்கு தொடருவேன். மிக் (MiG) ஒப்பந்தம் பற்றியும் நீங்கள் இப்படித்தான் எழுதினீர்கள். எதையும் சரிபார்க்காமல், யாரோ சொன்னார்கள் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதினீர்கள்.
FJ: அதனால்தான் நான் உங்களைத் தொடர்புகொண்டேன். யாராவது சொன்னதற்காக நான் எழுத மாட்டேன். உங்கள் தரப்பையும் கேட்கவே உங்களை அழைத்தேன்.
GR: நீ எழுதிப் பார். ஒரு அவதூறு வார்த்தையாவது எழுது. நான் வழக்கு தொடருவேன். எழுதியவனுக்கும், உங்கள் [ஆபாசச் சொல்] பத்திரிகைக்கும் எதிராக வழக்கு தொடருவேன்.
FJ: ராஜபக்ச அவர்களே, நீங்கள் என்னை மிரட்டுகிறீர்களா?
GR: ஆம், மிரட்டுகிறேன். நான் சொன்னதை ஒரு வார்த்தையாவது எழுது. ஒரு [ஆபாசச் சொல்] வார்த்தையாவது எழுது. பிறகு பார்ப்போம். FJ: நான் ஒரு பத்திரிகையாளராக உங்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி கேட்கத்தான் அழைத்தேன். ஆனால், நீங்கள் மிகவும் மோசமான ஆபாச வார்த்தைகளால் திட்டினீர்கள். (பின்னர், ஜூலை 6 அன்று, இந்த விவகாரத்தைப் பற்றிய தகவல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸுக்கு தெரிவிக்கப்பட்டதால், அது சரிசெய்யப்பட்டிருக்கிறது என்பதால், செய்தியை வெளியிடப் போவதில்லை என்பதை தெரிவிக்க மீண்டும் தொடர்பு கொண்டார்.)
FJ: ராஜபக்ச அவர்களே, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் ஒரு அதிகாரி என்னிடம், கேப்டன் பிரவீன் விஜேசிங்க காரணமாக விமானம் மாற்றப்பட்டிருந்தால் 56 பயணிகள் பயணம் செய்ய முடியாமல் போயிருப்பார்கள் என்றும், அது உங்களுக்குத் தெரியவில்லை என்றும் கூறினார்.
குப்பைத் தின்னும் பெண் பன்றி
GR: நேற்று உன்னிடம் என்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று சொன்னேனே? இந்த முட்டாள் விமானிகள் இதற்காக விமானங்களை மாற்றப் போகிறார்களானால், அது என் தவறு அல்ல. நான் இதை முறையாகச் செய்ய முயன்றேன். ஆனால், இந்த விமானிகளுக்குள் பிரச்சினை இருக்கிறது. உங்களைப் போன்ற மோசமான பத்திரிகையாளர்கள் அவர்களுக்குச் செவி சாய்க்கிறார்கள். முட்டாள்கள்! அது என் தவறு அல்ல.
FJ: உண்மைதான். ஆனால், முதலில் அந்த முடிவு எடுக்கப்பட்டதும், பின்னர் மூத்த விமானிகள் நிர்வாகத்தின் மீது அழுத்தம் கொடுத்ததால் அது மாற்றப்பட்டது என்பதே உண்மை.
GR: அது தவறு. நான் விசாரித்தேன். அப்படிப்பட்ட முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
FJ: அது உண்மையில் நடந்தது. எப்படியாயினும், நீங்கள் என்னை மிரட்டியதால் அல்ல; நீங்கள் சரியான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால், இந்த விவகாரத்தை வெளியிட வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
GR: ஆம், நான் மிரட்டினேன். உங்களைப் போன்ற பத்திரிகையாளர்கள் குப்பைத் தின்னும் பன்றிகள். மிகவும் மோசமானவர்கள்! மிகவும் மோசமானவர்கள்! மிகவும் மோசமானவர்கள்! இந்த நாட்டில் 90% மக்கள் உங்களை வெறுக்கிறார்கள். உங்களை அருவருக்கிறார்கள். நீங்கள் என் நிகழ்ச்சிக்கு வாருங்கள். அங்கே உங்களை எல்லோருக்கும் காட்டி, "இவர் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர்" என்று சொல்வேன். அப்போது 90% பேர் உங்களை வெறுப்பார்கள்.
FJ: அப்படி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
GR: நீ அப்படி நினைக்கவில்லை. அதுதான் உன் அகந்தை. நீ மிகவும் மோசமான பத்திரிகையாளர். [ஆபாசச் சொல்]. குப்பைத் தின்னும் பெண் பன்றி. நான் நீதிமன்றத்துக்குப் போவேன். மிக் ஒப்பந்தம் பற்றி நீங்கள் எழுதியதற்காக ஏற்கனவே கொடுத்துள்ள வழக்கை நான் வாபஸ் பெற மாட்டேன்.
FJ: அதற்கு எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.
GR: இருந்தாலும் உன்னை சிறையில் போடுவேன். நீ நாட்டைப் பிளக்க முயற்சிப்பவள். உண்மையான பௌத்தர்களை பிரிப்பவள். மிகவும் மோசமான பத்திரிகையாளர். தூதுவர்கள், அரசு சாரா அமைப்புகள், பாக்கியசோதி போன்றவர்கள் உனக்கு பணம் தருகிறார்கள்.
FJ: அப்படியானால் அது எவ்வளவு நல்ல விஷயம்!
GR: நீ குப்பைத் தின்னும் பெண் பன்றி. [ஆபாசச் சொல்] குப்பைத் தின்னும் பத்திரிகையாளர்.
FJ: ராஜபக்ச அவர்களே, நீங்கள் சொல்வதை நீங்களே தெளிவாகக் கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.
GR: மக்கள் உன்னை கொன்று விடுவார்கள். அவர்கள் உன்னை வெறுக்கிறார்கள். அவர்கள் உன்னை கொன்று விடுவார்கள்.
FJ: அது உங்கள் உத்தரவின்படியா?
GR: என்ன? இல்லை. என்னுடைய உத்தரவு அல்ல. ஆனால், உன்னைப் போன்ற கெட்டுப்போன [ஆபாசச் சொல்] பத்திரிகையாளரை அவர்கள் கொன்று விடுவார்கள்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |