மீண்டும் ஒருமுறை இந்த தேசத்துக்காக! மஹிந்த, கோட்டாபயவுக்கு பகிரங்க அழைப்பு
“அரச தலைவரும், பிரதமரும் பலமான முறையில் ஒன்றிணைந்து மீண்டும் ஒருமுறை இந்த தேசத்தின் நம்பிக்கையை யதார்த்தமாக்கி எதிர்வரும் காலங்களில் இப்பூமியை குணப்படுத்தும் பாரிய செயற்பாட்டில் இறங்க வேண்டும்” என கொலம்பகம ஸ்ரீ மியுகுணாராம ரஜமஹா விகாராதிபதி கல்லேஹெபிடியே பேமரதன தேரர் (Kallehepitiya Pemarathana) தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய அனைத்து பௌர்ணமி தினங்களிலும் நடத்தப்படும் 'அமாதம் சிசிலச' தர்ம உபதேசத் தொடரின் 217ஆவது தர்ம உபதேசம் இன்று (18) நுவரெலியாவிலுள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது.
அங்கு உபதேசம் நிகழ்த்தும் போதே கல்லேஹெபிடியே பேமரதன தேரர் இவ்வாறு குறிப்பிட்டார். தனது உபதேச உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இந்த நாட்டில் ராஜபக்ஷர்கள் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் செய்ய வேண்டியது மக்களை வாழ வைப்பதும் மக்களுக்கு வாழ்வளிப்பதும் தான்.
முப்பது வருட யுத்தம் முடிவடைந்த பின்னர், தேசத்திற்கு அடைக்கலம் கொடுத்தீர்கள். இரண்டாவது ஆபத்து இரண்டு வருடங்களாக நீடிக்கும் பயங்கரமான கொரோனா. கண்ணுக்கு தெரியாத எதிரி. அந்தப் பேரழிவை வெற்றிகரமாக சமாளித்து, அதனை சரியாக நிர்வகித்தீர்கள்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அளப்பரிய பலத்தை கொடுத்து, கண்ணுக்கு தெரியாத எதிரியை திட்டமிட்டு தோற்கடித்து, இந்த தேசத்திற்கு இரண்டாவது முறையாக புகலிடத்தை தந்தவர் மஹிந்த என அவர் புகழாரம் சூடியுள்ளார்.