காவல்துறை பொறுப்பதிகாரியின் வீட்டிலேயே கைவரிசையை காட்டிய திருடன்
காவல்துறை அத்தியட்சகரின் வீட்டில் திருட்டு
வாதுவ பிரதேசத்தில் வசிக்கும் காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் வீட்டிற்குள் இன்று (27) அதிகாலை திருடன் ஒருவர் நுழைந்து தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை திருடிச் சென்றதாக முறைப்பாடு செய்ததன் பிரகாரம், வாதுவ காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வாதுவ, மொல்லிகொட, பிரிவென வீதியில் உள்ள காவல்துறை அத்தியட்சகரின் வீட்டிற்குள் நுழைந்த நபர் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க மோதிரத்தையும், ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரூபா பணத்தையும் திருடிச் சென்றுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
திருட்டு இடம்பெற்றவேளை
திருட்டுச் சம்பவத்தின் போது காவல்துறை அத்தியட்சகரின் மனைவி, மகள் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வீட்டில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
குறித்த காவல்துறை அத்தியட்சகர் பாணந்துறை பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவிகாவல்துறை அத்தியட்சகராக கடமையாற்றியதாகவும் தற்போது மாத்தறை பிரதேசத்தில் காவல்துறை அத்தியட்சகராக கடமையாற்றி வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
பாணந்துறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சமந்த வெதகே மற்றும் உதவி காவல்துறை அத்தியட்சகர் நிஷாந்த சேனாரத்ன ஆகியோரின் பணிப்புரைக்கு அமைவாக குற்றத்தடுப்பு பிரிவினர் பிரதான காவல்துறை பரிசோதகர் சர்மிந்த பிந்து தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.