திலினி பிரியமாலியின் மற்றுமொரு மோசடி அம்பலம்
எரிபொருள் கொண்டுவரும் முகவர்
நாட்டில் உள்ள பல்வேறு கோடீஸ்வர வர்த்தகர்களிடம் பல மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள திலினி பிரியமாலி, எரிபொருள் நெருக்கடியின் போது இலங்கைக்கு எரிபொருள் கொண்டு வரும் முகவராக நடித்து வர்த்தகர்களிடம் மில்லியன் கணக்கான டொலர்களை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்யும் முகவராக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், டொலர் நெருக்கடியால் எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி வர்த்தகர்களை ஏமாற்றியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் குறிப்பிட்டன.
எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு டொலர்
எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு டொலர்களை தருமாறும், இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்த பின்னர் அதனை விற்று அதிக இலாபம் ஈட்டலாம் எனவும் கூறி வியாபாரிகளிடம் சந்தேக நபர் ஏமாற்றியுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபரின் வாக்குமூலத்தின்படி பல வர்த்தகர்கள் அவருக்கு டொலர்களை வழங்கியுள்ளதாகவும், அவர் வியாபாரிகளிடம் இருந்து பெறப்பட்ட டொலர்களை மோசடி செய்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..
ஏமாற்றப்பட்ட வர்த்தகர்
எரிபொருள் தாங்கிக்கு பணம் செலுத்தவென 60,000 அமெரிக்க டொலர்கள், 136 பவுண்ஸ்கள் மற்றும் 100,000 அவுஸ்திரேலிய டொலர்களை வர்த்தகர் ஒருவர் கொடுத்துள்ளார்.
இரண்டு நாட்களில் இலாபத்துடன் பணத்தை தருவதாக கூறி சந்தேகநபர் பணத்தை பெற்றுக்கொண்டதாக வர்த்தகர் நேற்று ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டார்.
