அம்பலமாகும் ஊழல் மோசடிகள் : கலக்கத்தில் ராஜபக்ச தரப்பு
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தின் பிரகாரம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் ஊழல்வாதிகள் அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்தார்.
அத்துடன் அரச நிதியை மோசடி செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “ராஜபக்சர்கள் உட்பட கடந்தகால ஊழல்வாதிகளின் ஊழல் மோசடிகள் வெளிவரும் போது பல ஊழல்வாதிகள் தற்போது அச்சமடைந்து கலக்கமடைந்துள்ளார்கள்.
அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ரக்பி வீரர் தாஜூதீனின் படுகொலை தொடர்பில் புதிய விடயங்கள் வெளியாகும் போது நாமல் ராஜபக்ச அச்சமடைந்து காவல்துறை திணைக்களத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்.
தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தல்
காவல்துறைமா அதிபருக்கு அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் எதிர்க்கட்சியினர் மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தினார்கள்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நாடாளுமன்றத்துக்கு பிரேரணை ஒன்றை கொண்டு வந்தார். இந்த பிரேரணையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அரசியலமைப்பின் ஊடாகவே பிரதமர் பதிலளித்தார்.
சுஜூவ சேனசிங்க முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. சுயாதீன காவல்துறை ஆணைக்குழுவை அரசியல் மயப்படுத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு கிடையாது.
ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைவாகவே ஒருசில அதிகாரங்கள் காவல்துறைமா அதிபருக்கு வழங்கப்படவுள்ளது. காவல்துறை ஆணைக்குழுவின் சுயாதீனத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
