இராணுவம் தமிழர் நிலத்தில் நிலைகொண்டிருப்பது பாதுகாக்கவா... பயிர் செய்யவா...
வடக்கு, கிழக்கில் போர் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையில்தான் போர் இன்னும் முடியவில்லை.
துப்பாக்கிச் சத்தங்கள் மௌனமாகியபோதும் ஆக்கிரமிப்பின் சுமை இன்னமும் தமிழர்களின் தோள்களை அழுத்திக் கொண்டே இருக்கிறது.
அந்த ஆக்கிரமிப்பின் மிகக் கொடூரமான வடிவமாகவே தமிழர்களின் பூர்வீக நிலங்கள் இன்னும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பார்க்க முடிகிறது.
அதனால் ஈழ மக்களின் வாழ்வு, பொருளாதாரம், பண்பாடு என அத்தனையும் ஒடுக்கப்படுகிறது.
பயிர் செய்யும் இராணுவம்
இராணுவத்தால் தமிழர் நிலம் எப்படியெல்லாம் ஆக்கிரமிக்கப்படுகிறது என்பதற்கு மிக அண்மைய உதாரணமாக யாழ்ப்பாணம் வலி.வடக்கின் நிலைமையைச் சுட்டிக்காட்டலாம்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர், வலி.வடக்கில் உயர் பாதுகாப்பு வலயத்திற்காக 1661 ஏக்கர் காணி இராணுவத்திற்குத் தேவைப்படுவதாகவும், அதற்குரிய இழப்பீட்டை காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இராணுவம் மேற்கொள்ளும் விவசாய நடவடிக்கைகள் தமது தேவைக்காக மட்டுமே நடைபெறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், வலி.வடக்கில் நிலை கொண்டுள்ள இராணுவத்தின் செயற்பாடுகள் முற்றிலும் வேறுபட்ட கதையைக் கூறுகிறது.
பாதுகாப்பு என்ற காரணத்தைக் கூறி மக்களை அவர்களது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றிய அரசு, அந்த நிலங்களை இன்று இராணுவத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையங்களாக மாற்றியுள்ளது என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இடம்பெயர்ந்து வாழும் நிலையில், தமது காணிகளில் இராணுவம் விவசாயம் செய்து அதிலிருந்து வருமானம் ஈட்டுவதை அவர்கள் கடும் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.
மரக்கறி விற்கும் இராணுவம்
இதனை உறுதிப்படுத்தும் வகையில், வலி.வடக்கிலுள்ள இராணுவப் பண்ணைகளில் உற்பத்தியாகும் மரக்கறிகள் யாழ்ப்பாணம் பலாலி வீதியின் உரும்பிராய் பகுதியில் இயங்கும் தனியார் மரக்கறி கொள்வனவு நிலையத்திற்கு பெருமளவில் கொண்டு செல்லப்பட்டு சந்தைப்படுத்தப்படுகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை உறுதிப்படுத்தும் புகைப்படங்களும் காணொளிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. எனவே, இது சுய தேவைக்கான உற்பத்தி என்ற அரசின் விளக்கத்தை மக்கள் ஏற்க மறுக்கின்றனர்.
உண்மையில் இது வணிக நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் உற்பத்தி நடவடிக்கையாகவே அவர்கள் கருதுகின்றனர். இந்த நிலைமை வலி.வடக்குடன் மாத்திரம் முடிவடைவதில்லை என்பதுதான் மற்றொரு அதிர்ச்சி.
வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர்களின் நிலங்களில் இராணுவம் விவசாயப் பண்ணைகள் அமைத்து செய்கை மேற்கொள்கிறது. அதோடு, பால் உற்பத்தி, கோழிப்பண்ணைகள், கால்நடை வளர்ப்பு போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.
பல இடங்களில் சலூன்கள், தையலகங்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களையும் இராணுவம் நடத்தி வருகிறது. கிளிநொச்சி நகரத்தில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் அருகில் தேனீரகம், சலூன், தையலகம் என்பவற்றை இராணுவத்தினர் நடாத்தி வருகின்றனர்.
இராணுவத்தின் பிடியில் வளமான இடங்கள்
அதெப்படி இராணுவம் இப்பிடி வணிகக் கடைகளை நடாத்துவதும் பயிர் செய்வதும் பாதுகாப்பு ஆகும்? அரசின் அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தைப் போட்டியில் இறங்கியுள்ள ஒரு நிறுவனத்தின் செயல்பாடாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
இதன் விளைவாக, போரினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் தொழில்முனைவோர் மேலும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனர்.
தமிழர்களின் நிலங்கள் மட்டுமல்ல, அவர்களது இயற்கை வளங்களும் நீண்டகாலமாக இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
காடுகள், மேய்ச்சல் நிலங்கள், நீர்த்தேக்கங்கள், குளங்கள் மற்றும் விவசாய வளங்கள் பலவற்றின் மீது இன்னும் இராணுவத்தின் ஆதிக்கம் நீடிக்கிறது. இதனால் மக்களின் பாரம்பரிய வாழ்வாதாரத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
போர் முடிந்த பின்னர் மீள்குடியேற்றம் குறித்து பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. காணிகள் விடுவிக்கப்படும் என்றும், மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் மாறி மாறி வந்த பல அரசுகள் உறுதியளித்தன.
ஆனால் நடைமுறையில் முழுமையான மாற்றம் எதுவும் நிகழவில்லை. மாறாக, நிலங்களை நிரந்தரமாக அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிப்பதும், காணிகளுக்குப் பதிலாக இழப்பீடு வழங்கும் அணுகுமுறையும் மக்களின் காணிகளை நிரந்தரமாக பறிக்க முயல்கின்றன.
மரபுரிமை நிலத்தை இழக்க முடியுமா?
ஒரு குடும்பத்திற்கு நிலம் என்பது வெறும் சொத்து மாத்திரமல்ல, அது அவர்களின் தலைமுறைகளின் அடையாளம். அது அவர்களின் வாழ்வாதாரம்.
அது அவர்களின் நினைவுகள். எல்லாவற்றையும் தாண்டி அது அவர்களின் மரபுரிமை. எனவே, பணம் வழங்கி நில உரிமையை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை இன்றைய அரசு உணர வேண்டும்.
உரிமையாளர்களின் காணிகள் அவர்களிடமே திருப்பிக் கையளிக்கப்பட வேண்டும். அதுவே மக்களின் கோரிக்கை. வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கலைக் குறைக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கோரி வருகின்றனர்.
தனியார் காணிகளில் இருந்து இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும். விவசாயம், வணிகம் மற்றும் ஏனைய பொருளாதார நடவடிக்கைகளில் இருந்து இராணுவம் விலக வேண்டும். கடல், காடு, குளம், விவசாய நிலங்கள் உள்ளிட்ட மக்களின் பொருளாதார வளங்கள் அனைத்தும் மீண்டும் மக்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது தமிழர்களின் கோரிக்கையாக தொடர்ந்து இருந்து வருகிறது.
தமிழர்களின் நிலங்களை தமிழர்களிடமே மீள ஒப்படைப்பதும், இராணுவத்தின் பொருளாதார ஆக்கிரமிப்புக்கு முடிவுகட்டுவதும், வடக்கு–கிழக்கின் சமூக மற்றும் பொருளாதார மீட்சிக்கான முதல் படியாகும்.
இராணுவத்தை பாதுகாப்பு தரப்பு என்கிறது இலங்கை அரசு. ஆனால் இலங்கை இராணுவமோ தமிழர் பகுதியில் பயிரச்செய்து கொண்டு உழைப்பில் ஈடுபடுவதைப் பார்க்கையில் அந்நிய இராணுவம் ஒன்று ஒரு தேசத்தை ஆக்கிரமித்துச் சுறண்டுவதைப் போல இருக்கிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |