நீதிமன்ற வழக்குகளில் குடும்பத்தின் மூன்று உறுப்பினர்கள்! விசாரணை மையத்தில் ராஜபக்சர்கள்
ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் தொடர்பான வழக்குகள் கடந்த வாரம் நீதிமன்றத்தில் தனித்தனியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
முதலாவதாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையில் தனது கைது நடவடிக்கையைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்கக் கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாக்கல் செய்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹெரத், பிரதிவாதிகளிடமிருந்து இன்னும் பதில் வராததால், எந்தவொரு முடிவையும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க இயலவில்லை என்று கூறினார்.
மேலதிக பரிசீலனை
அதன்படி, மேல்முறையீட்டு நீதிமன்றம் மனு மீதான மேலதிக பரிசீலனையை ஜூன் 24 வரை ஒத்திவைத்தது. இந்த மனு ஆரம்பத்தில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இருப்பினும், நீதியரசர் பெர்னாண்டோ தனிப்பட்ட காரணங்களைக் கூறி வழக்கை விசாரிப்பதிலிருந்து விலகிக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நீதியரசர் சரத் திசாநாயக்க அந்த அமர்வில் சேர்க்கப்பட்டார்.
இதன்படி கோட்டாபயவுக்காக முன்னிலையான சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் தனது கட்சிக்காரருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக நடத்தப்பட்ட எந்தவொரு விசாரணையின்போதும் ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சஷீந்திர ராஜபக்ச
இதற்கிடையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC), முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச மற்றும் மேலும் இருவர் மீது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது.

குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற இருவர் செபாலிகா சமன் குமாரி மற்றும் கீர்த்தி கொட்டாகம என அடையாளம் காணப்பட்டனர்.
அரகாலய காலத்தில் நடைபெற்ற வன்முறையில் சேதமடைந்த இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்துக்காக ரூ. 8.8 மில்லியன் மதிப்பிலான இழப்பீட்டை சட்டவிரோதமாகப் பெற்றதாக இந்த மூவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதும் 10 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பாக 30 சாட்சிகளையும் 35 நீதிமன்ற ஆவணங்களையும் அரசுத் தரப்பு பட்டியலிட்டுள்ளது.
யோஷித ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச, இலங்கை கடற்படை மற்றும் பிரித்தானிய ரோயல் கடற்படை அகாதமியில் தன்னைச் சேர்த்துக் கொள்வது தொடர்பான ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் CIABOC-ஆல் கைது செய்யப்பட்டார்.

அவர் கொழும்பு பிரதம நீதவான் அசங்க போதரகம முன்பு முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்நிலையில் யோஷித தலா ரூ. 5 மில்லியன் மதிப்புள்ள மூன்று சரீர பிணைகளில் செல்ல உத்தரவிடார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |