வாகன உதிரிப்பாகங்களை திருடிய சாரதி உட்பட மூவர் கைது
வாகன உதிரிப்பாகங்களை திருடிய கொள்கலன் ஊர்தி சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகல் (04) கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவிற்குட்பட்ட மஹவத்த எனும் பகுதியில் இறக்குமதி செய்யப்பட்ட வாகன உதிரிப்பாகங்கள் அடங்கிய கொள்கலனில் 2,403,200 ரூபா பெறுமதியான உதிரிப் பாகங்கள் இல்லை என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கொழும்பு வடக்குப் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பின்னணி

இதனைத்தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டு கிராண்ட்பாஸ் காவல்துறையினரிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 37, 53 மற்றும் 55 வயதுடைய களனி, கிராண்ட்பாஸ் மற்றும் நாகொல்லாகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ராஜகிரிய பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவர் இந்த உதிரி பாகங்கள் அடங்கிய கொள்கலனை சீனாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்துள்ளார்.
அதனை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் சரிபார்த்த பின்னர், அவர் ஆர்டர் செய்த அளவு உதிரிபாகங்கள் இல்லாததால், அவர் மேற்கண்டவாறு முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி, உதிரிப் பாகங்கள் அடங்கிய கொள்கலனை எடுத்துச்சென்ற ஓட்டுநரிடம் விசாரித்ததில், அவர் மேலும் இருவருடன் சேர்ந்து கொள்கலனை திறந்து வாகன உதிரிப்பாகங்களை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.
பின்னர், சந்தேகத்தின் பேரில் மூவரையும் கைதுசெய்த காவல்துறையினர், திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட 37 உதிரிப்பாகங்களை கண்டுபிடித்துள்ளனர்.