அம்பாறையில் துப்பாக்கிசூடு - மூன்று காவல்துறையினர் ஸ்தலத்தில் பலி -பலர் காயம்
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் காவல் நிலையத்தில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 3 காவல்துறையினர் உயிரிழந்திருப்பதுடன் காவல் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 3 காவல்துறையினர் காயமடைந்து வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக நம்பப்படும் காவல்துறை சார்ஜன்ட் மொனராகலையின் காவல் நிலையம் ஒன்றில் சரணடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த மூவரில் ஒருவர் கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் காவல்துறை அதிகாரி என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
காயமடைந்த காவல்துறையினர் அனைவரும் திருக்கோவில் மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த காவல் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் தேடுதல் மேற்கொண்டு வருகின்றனர்.