இன்றைய நாடாளுமன்ற அமர்வு : விவாதிக்கப்படவுள்ள முக்கிய விடயங்கள்
இன்றைய (23.06.2026) நாளுக்கான நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) தலைமையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளன.
காலை 09.30க்கு ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் மாலை 05.00 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காகவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 11.30 முதல் மாலை 5.00 மணிவரை பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாவது மதிப்பீடு, சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2482/09 மற்றும் 2487/02 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல்களில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டளைகள், இறக்குமதி ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2487/29 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட விதிமுறைகள் என்பன விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன.
இதனையடுத்து, மாலை 5.00 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்படும் “நிகழ்நிலைக் காப்புச்சட்டம் (இரத்துச் செய்தல்) சட்டமூலம் எனும் தனிநபர் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு குறித்து ஆராய்வதற்காக சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படவுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |