அநீதி இழைக்காத வகையில் புதிய எண்ணக்கருக்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - சஜித் கோரிக்கை
புதிய எண்ணக்கருக்களை நடைமுறைப்படுத்த வரும் போது எந்தத் தரப்புக்கும் அநீதி இழைக்காத வகையில் அவை மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பின்ணனி
கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்டிய பகுதிகளில் 2000 ற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாடகை வாகனங்கள் சேவையில் உள்ளதாகவும், இந்த வாடகை வாகன சேவையில், 6 சங்கங்களில் 1057 பேரும், டெண்டர் முறையின் பிரகாரம் கவுண்டர்கள் மூலம் கிட்டத்தட்ட 1000 பேர் வாடகை வாகன சேவைமற்றும் வெளிநாட்டினர் போக்குவரத்து சேவையிலும் ஈடுபட்டாலும், அண்மையில் விமான நிலையங்களுக்குப் பொறுப்பான அமைச்சர், Uber மற்றும் Pick Me சேவைகளை இணைக்க முடிவுசெய்துள்ளார்.
இதனால் நீண்ட காலமாக வாடகை சேவையை பயன்படுத்தி வரும் தரப்புக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் வாடகை வாகன சேவைகள் சங்கங்களின் உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து இந்த அநீதி குறித்துத் தெரிவித்ததன் பிற்பாடே அவர் இவ்விவகாரம் குறித்து இன்று(21) நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளார்.
நிர்க்கதியாகியுள்ள குடும்பங்கள்
அத்துடன், கிடைக்கப்பெறும் தகவலின் பிரகாரம், எந்தவொரு கொள்முதல் முறையும் இல்லாமல் இந்த புதிய அனுமதி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நாட்டில் கொரோனாவின் பரவல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் பொருளாதார மந்தநிலை காரணமாக வாடகை வாகனங்களின் பயண எண்ணிக்கை கூட குறைந்துள்ளது.
அமைச்சரின் இவ்வாறான செயலை அனுமதிக்க முடியாது எனவும் இது வாடகை வாகன சாரதிகளுக்கு அநீதி இழைப்பதானதாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த இரண்டு நிறுவனங்களின் விளம்பரங்களும் கூட விமான நிலையத்திற்குள் காட்சிப்படுத்தப்படுவதாகவும், இதனால் சுமார் 2000 வாடகை வாகன ஓட்டுநர்கள் வேலையிழந்து குடும்பமும் நிர்க்கதிகளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
