கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
குறித்த விடயம் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (07) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அது மேற்கு - வடமேற்குத் திசையில் நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை
எனவே, நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை ஜனவரி எட்டாம் திகதியிலிருந்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றரிற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
பலத்த காற்று
வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |