இலங்கையை மறக்கும் சுற்றுலா பயணிகள் - வெளிவந்த அதிர்ச்சிகர தகவல்
குறைவடைந்த சுற்றுலா பயணிகளின் வருகை
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக வெளியான புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, 2022 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டிற்கு வந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 440,110 ஆகும்.
இதேவேளை இவ்வாண்டில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 28,733 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

குறித்த தரவுகள் நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்த ஆனால் நிலையானதாக இருப்பதைக் காட்டுகிறது, மேலும், நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதாரக் குழப்பங்கள் இருந்தபோதிலும், சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை மீதான ஆர்வம் உள்ளது என்பதைக் குறிக்கிறது.
முதலிடத்தில் இங்கிலாந்து
இலங்கை சுற்றுலாவின் மிகப்பெரிய ஆதார சந்தையாக இங்கிலாந்து உள்ளது. ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 4,714 பேர் இங்கிலாந்திலிருந்து வந்துள்ளார்கள். இந்தியா 3,375 வருகையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன்,. ஜேர்மனி 2,322 சுற்றுலாப் பயணிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
ஜூலை மாதத்திற்கான ஏனைய குறிப்பிடத்தக்க சந்தைகளில் கனடா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகியவை அடங்கும்.
ஜூலை 19 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டிற்கான மொத்த வருகைகளின் ஒட்டுமொத்த பகுப்பாய்வு, இலங்கையின் சுற்றுலாப் போக்குவரத்தில் மிகப்பெரிய பங்களிப்பாளரான பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்பதைக் காட்டுகிறது.
மீண்டும் அவசரகால சட்டம்

இந்தியாவிலிருந்து 72,136 சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். இங்கிலாந்து 54,336 சுற்றுலா பயணிகள் வருகையுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ரஷ்யா 47,412 சுற்றுலா பயணிகள் வருகையுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
எனினும், புதிதாக தெரிவு செய்யப்பட்ட அதிபர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருப்பதால், நாட்டிற்கு வருபவர்களின் எண்ணிக்கை மேலும் குறைய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்படுகிறது.