வடமராட்சியில் மாணவனுக்கு நேர்ந்த துயரம்
குறுக்கே சென்றது மாடு
வடமராட்சி குஞ்சர்கடைப் பகுதியில் இன்று காலை 10:00 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய மாணவன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் வடமராட்சி கரவெட்டி குஞ்சர் கடை கண்டான் வீதியில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற மாணவனுக்கு முன்னால் மாடு ஒன்று குறுக்காக சென்றதாகவும் ,இதனால் பதட்டமடைந்த மாணவன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் விபத்து ஏற்பட்டிருக்கிறது.
படுகாயமடைந்த மாணவன்
உடனடியாகவே காயமடைந்த மாணவனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது மருத்துவமனையில் மரணமடைந்துள்ளதாகவும். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை நெல்லியடி காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரியவருகிறது.
சடலம் தற்போது உரிய விசாரணைகளுக்காகவும், உடற்கூற்று பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதாக நெல்லியடி காவல் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து சம்பவத்தில் மண்டான் கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த செல்வமோகன் வாணிஜன் (வயது 17) என்பவரே உயிரிழந்தவராவார்.
குறித்த மாணவன் தற்போது நடைபெற்ற க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர் எனவும் தெரியவந்துள்ளது.
