அரசாங்கத்தின் முக்கிய பிரிவொன்றின் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம்! வெளியாகியுள்ள அறிவிப்பு
அரசாங்கத்தின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் உயர் அதிகாரிகளுக்கான 2027ஆம் ஆண்டிற்கான வருடாந்திர இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
18/2026 இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கைக்கு அமைவாக, இந்த இடமாற்றங்கள் 2027 ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளன.
இடமாற்றங்களுக்கான தகுதிகள்
இதன்படி, ஒரே பணியிடத்தில் 05 ஆண்டுகள் சேவையாற்றிய அலுவலர்கள் கட்டாய இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுவதுடன், 02 ஆண்டுகள் சேவையாற்றிய அலுவலர்களும் இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாவர்.

இதற்கான விண்ணப்பங்களை பொது நிர்வாகத்திற்கான முகாமைத்துவ தகவல் அமைப்பு (MIS) மூலம் நிகழ்நிலையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், அதிகாரிகள் தமது அடிப்படை தனிப்பட்ட விவரங்கள் மற்றும் முந்தைய சேவை நிலையங்களின் தகவல்களை கணினியில் துல்லியமாக புதுப்பிப்பது அவசியமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேல்முறையீடு செய்தல்
இதேவேளை, 2026 ஓகஸ்ட் 25 முதல் டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் குறிப்பிட்ட சில இடமாற்ற கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வருடாந்திர இடமாற்ற உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பும் அதிகாரிகள், தமக்கு இடமாற்ற உத்தரவு கிடைக்கப்பெற்ற நாளிலிருந்து 14 நாட்களுக்குள் அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரிகளின் பணிக்காலம், தற்போதைய பணிநிலையம் மற்றும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு இந்த இடமாற்ற செயல்முறை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |