தமிழீழ தேசத்தின் பெருமகன் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மரியாதை வணக்கம்
தமிழீழ விடுதலைப் போராட்ட வழித்தடத்தில் நிலைத்து நிற்கும் பெருமகனாகிய தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் (Thambapillai Maheswaran) அவர்களது இழப்பு எம்மை ஆறாப்பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிடியில் இருந்து விடுபட்டு ஈழத்தமிழினம் சுதந்திரமாக வாழ 'தமிழீழமே' ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை உறுதிபூண்டவர்.
தமிழீழ அரசாங்கம்
சிங்கள இராணுவ எந்திரத்தினை தகர்த்தெறிய தமிழீழ இராணுவம் என்ற கட்டமைப்பினை உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டவர் அதன் காரணமாக சிங்கள அரச பயங்கரவாதத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பனாகொடை சிறைக்கூண்டைத் தகர்த்து அங்கிருந்து வெளியேறிய முதலாவது தமிழ் போர்க்கைதி (அரசியல்கைதி) என்ற பெயரை வரலாற்றின் தனதாக்கிய பெருமகனாவார்.
சிங்கள பேரினவாதத்தின் வெலிக்கடைச்சிறையில் 53 தமிழ் போர்கைதிகள் கொடியமுறையில் படுகொலை செய்யப்பட்ட போது அதிலிருந்து உயிர்தப்பி பின்னராக மட்டக்களப்பு சிறையுடைப்பினை மேற்கொண்டு அங்கிருந்து பல தமிழ் போர்க்கைதிகள் வெளியேறுவதற்கு வழியமைத்த பெருமகனாவும் அமரர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்கள் இருந்துள்ளார்.
காவல்நிலையத்தின் மீதான தாக்குதல்
கிளிநொச்சி காவல்நிலையத்தின் மீதான தாக்குதல், யாழ் கோட்டையில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினர் மீதான தாக்குதல் என பலவேறு களங்களிலும் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் ஆற்றிய பங்கு வரலாற்றின் வழித்தடத்தில் முக்கிய பக்கங்களாகவுள்ளன.
காலச்சுழல் அவர் தலைமை தாங்கிய தமிழீழ இராணுவத்தை தொடர முடியாத சூழலில் போராளிகளை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணையுமாறு கூறியிருந்ததோடு இயலாவிடின் விடுதலைப் போராட்டத்துக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்குமாறு அறிவுறுத்தியிருந்தார்.
தமிழீழ அரசை உருவாக்குவதற்காக வாழ்ந்து மடிந்த அமரர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் அவர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மரியாதை வணக்கத்தினை இத்தால் தெரிவித்துக் கொள்கின்றது அத்தோடு அன்னாரின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரது கரங்களை இறுகப்பற்றிக் கொள்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
