அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தைத் இராஜதந்திர வெற்றியாக சித்தரிக்கும் ட்ரம்ப்!
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மற்றும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் தற்போதைய பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றங்களை டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தங்களது மிகப்பெரிய இராஜதந்திர வெற்றியாகவே சித்தரிக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் (Georgetown University) அரசியல் பிரிவு இணைப் பேராசிரியர் பால் மஸ்கிரேவ் இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்த உடன்படிக்கை
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ட்ரம்ப் நிர்வாகமானது இந்த ஒப்பந்தத்தின் ஒவ்வொரு பிரிவையும் ஒட்டுமொத்த உடன்படிக்கையையும் உற்றுநோக்கி இது டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தற்போதைய துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஆகியோரின் அசாத்திய பேச்சுவார்த்தைத் திறமையால் மட்டுமே சாத்தியமானது என்று நாட்டு மக்களிடம் கூறும்.
இருப்பினும் ஒரு நடுநிலையான வெளியூர் பார்வையாளரின் கண்ணோட்டத்தில் இந்த ஒப்பந்தம் முற்றிலும் வேறானதாகவே தெரியும்.

பல வழிகளில் பார்க்கும் போது இது போர் தொடங்குவதற்கு முன்னிருந்த பழைய நிலைக்கே மீண்டும் திரும்புவதாகும்.
ஆனால் இந்த முறை ஈரானிடம் அதிகப்படியான சாதகமான பலம் உள்ளது என்பது மட்டுமே வித்தியாசம்.
முழுமையான வெற்றி
ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது மற்றும் ஆயுதக் கட்டுப்பாட்டு ஆய்வுகள் போன்ற ஒப்பந்தத்தின் முக்கிய கூறுகள் அனைத்தும் போருக்கு முன்னரே நடைமுறையில் இருந்தவை.
அதேவேளை இந்த ஒப்பந்தத்திற்கு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் கிடைத்துள்ள அதிகரித்த ஆதரவையும் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளைத் தளர்த்துவதன் மூலம் கிடைக்கக்கூடிய பொருளாதார நன்மைகளையும் வாஷிங்டன் முன்னிலைப்படுத்தக் கூடும்.

ஈரானிய கச்சா எண்ணெய் உலகச் சந்தைக்கு வர அனுமதிக்கப்படுவது அமெரிக்க நுகர்வோருக்கு (எண்ணெய் விலை குறைப்பு மூலம்) ஓரளவிற்கு உதவும்.
எனினும், பல அமெரிக்கர்கள் ட்ரம்ப் நிர்வாகத்தின் இக்கொள்கையை முழுமையான வெற்றியாகப் பார்க்காமல் நன்மையும் தீமையும் கலந்த ஒன்றாகவே கருதுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |