முடக்கப்பட்ட வங்கி கணக்குகள்...!அதிரடியாக வழக்கு தொடர்ந்த ட்ரம்ப்
அரசியல் காரணங்களுக்காகத் தனது வங்கிக் கணக்குகளை முடக்கியதாகக் குற்றம் சாட்டி, ஜேபி மோர்கன் சேஸ் வங்கி மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மீது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஐந்து பில்லியன் டாலர் நஷ்டஈடு கோரி புளோரிடாவில் உள்ள மியாமி-டேட் கவுண்டி நீதிமன்றத்தில் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரியில் பதவியிலிருந்து விலகிய பிறகு, அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் ஜேபி மோர்கன் வங்கி தனது கணக்குகளை முடக்கியதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அரசியல் காரணங்கள்
வங்கி நிறுவனமான ஜேபி மோர்கன் சேஸ் மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டிமோன் ஆகியோர், தனது வணிகங்களை அவசரமாக வேறு இடங்களில் வங்கிக் கணக்குகளைத் திறக்கக் கட்டாயப்படுத்தியதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே இந்த இழப்பீட்டு வழக்கினைத் தான் தொடர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், ஜேபி மோர்கன் நிறுவனம் இக்குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அரசியல் காரணங்களுக்காகக் கணக்குகளை மூடவில்லை என்று வலியுறுத்தியுள்ளது.
வழக்குத் தொடர ட்ரம்ப்புக்கு உரிமை உள்ளது, அதேபோல் வழக்கில் எங்களுடைய நியாயத்தை விவரிக்க எங்களுக்கும் உரிமை உள்ளது என ஜேபி மோர்கன் வங்கித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, ட்ரம்ப் தொடுத்துள்ள இந்த வழக்கு நியாயமற்றது எனவும் அந்த வங்கி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |