ஐ.எம்.எப் வழங்கும் கடன் நிதியைத் தடுக்க முயற்சி - மொட்டுக் கட்சி உறுப்பினர்!
"அரசாங்கத்துக்கு எதிரான சில தரப்பினர் சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனுதவியை தடுப்பதற்கு முயற்சி எடுக்கின்றனர்."
இவ்வாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐ.எம்.எப் நிதியை தடுக்க முயற்சி
மேலும் அவர்,
"நாடு பாரிய பொருளாதார பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம் கடன் ஒப்புதலை வழங்கியுள்ளதுடன், இந்திய அரசும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது.
அதிபர் ரணில் விக்ரமசிங்க எடுத்த பல முயற்சிகள் மூலம் குறுகிய காலப்பகுதிக்குள் கடனை வழங்க சர்வதேச நாணய நிதியம் முன்வந்துள்ளது.
இவ்வாறு இருக்கும் நிலையில், அரசாங்கத்துக்கு எதிராக சில தரப்பினர், சுயலாப அரசியல் சிந்தனையுடன் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை நிறுத்துவதற்கு முயற்சிகளை எடுக்கின்றனர்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கிய கடன் நிதியை தேர்தலுக்கு செலவழித்து நாட்டை மீண்டும் குழப்புவதை தவிர்த்து இன்னும் சிறிது காலத்தின் பின்னர் தேர்தலுக்கு செல்வதே சிறந்தது.
நாடு தற்போது உள்ள சூழ்நிலையில் தேர்தல் அவசியமானதல்ல." இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

