பவள விழா பாப்பா...! ஸ்டாலினை சீண்டிய தவெக தலைவர் விஜய்
அரசியலில் தங்களை யார் எதிர்த்து நின்றாலும் கொந்தளிப்பதே தி.மு.கவின் வேலை என தவெக கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
பனையூரில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வழக்கம் போலவே இன்றைய பேச்சிலும் தி.மு.கவை மட்டுமல்லாது தமிழக முதல்வர் ஸ்டாலினையும் விஜய் விமர்சித்துப் பேசியுள்ளார்.
ராத்திரியில் தூக்கம் வரவில்லை
“சிஎம் சார், ஸ்டாலின் சார், 2 வருடங்களுக்கு முன்பு ஒரு மேடையில், “சில அமைச்சர்கள் செய்யும் அட்ராசிட்டிகளைப் பார்த்து ராத்திரியில் தூக்கம் வரவில்லை” என்று சொன்னீர்கள்.

அந்த காணொளி கூட இன்னும் இணையத்தில் கிடைக்கிறது. அதையும் தாண்டி ஒருவேளை அவர் என்றாவது அசந்து தூங்கும் போது, ‘சார் எந்த சின்னத்துக்கு ஓட்டுப் போடுவீர்கள்?’ என்று யாராவது அவரை எழுப்பிக் கேட்டால், ‘விசில் சின்னத்துக்கு’ என்பார்.” என்று விஜய் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்.
‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும்.
தமிழக வெற்றிக் கழகம் நகர்ப்புறங்களில் தான் இருக்கிறது. கிராமங்களில் இல்லை என்று சொல்பவர்கள் சற்று ஆய்வு செய்து பாருங்கள். விசில் சின்னம் போகாத ஊரே இல்லை. விசில் இருக்குமிடமெல்லாம் தமிழக வெற்றிக் கழகம் இருக்கிறது.
விலை கொடுத்தாலும் வாங்க முடியாது
தமிழகத்தில் எனது அம்மா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிப்பதை எவராலும் தடுக்க முடியாது, அவர்களை என்ன விலை கொடுத்தாலும் வாங்க முடியாது.
திமுக என்ற தீய சக்தியை வீழ்த்த தமிழக வெற்றிக் கழகம் என்ற தூய சக்தியால் தான் முடியும்.
இது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல. இதுதான் கள நிலவரம். தமிழக மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் தான் இப்போது இருக்கும் ஒரே தெரிவு என விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |