காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : மட்டக்களப்பில் இருவர் வசமாக சிக்கினர்
மட்டக்களப்பு ஏறாவூர் ,காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரிகளான தையல் தொழில் செய்பவர் ஒருவர் உட்பட இருவரை 120 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி காவல்துறை பரிசோதகர் பி.கே. திலகரெத்தின தெரிவித்தார்
மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு ஏறாவூர் காவல்துறையின் இரண்டு பிரிவுகள் ஒரே நேரத்தில் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தன.
26 வயதுடைய வியாபாரி கைது
இந்த நிலையில் காத்தான்குடி எப்.சி. வீதியில் வியாபாரத்துக்காக போதைப் பொருளை எடுத்துக் கொண்டு சென்ற 26 வயதுடைய வியாபாரியை சுற்றிவளைத்து 10 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.

அதேவேளை ஏறாவூர் காவல் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வீதியில் வைத்து அந்த பகுதியில் ஆடைகள் தைக்கும் உரிமையாளரான வியாபாரியை 110 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்.
காவல்துறை தடுப்பில் வைத்து விசாரணை
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு வியாபாரிகளையும் காவல்துறை தடுப்பில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்தார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |