இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகரின் மோசமான செயற்பாடு
வத்தளை மற்றும் பொரளை கோட்டா வீதியில் 4 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கை வர்த்தகர் ஒருவர் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை இலங்கைக்கு அனுப்புவதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் நடத்தப்பட்ட முதல் சோதனை

ஊக்கமருந்து தொடர்பாக இலங்கையில் நடத்தப்பட்ட முதல் சோதனை இது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இந்நாட்டில் வீரர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக பாணந்துறை வலன ஊழல் ஒழிப்புப் பிரிவினருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் பேரில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
உடற்கட்டமைப்பு நிலையம் சுற்றிவளைப்பு

சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தொடர்பில் தெரியவந்த தகவலின் பிரகாரம் பொரளை, கோட்டா வீதியிலுள்ள உடற்கட்டமைப்பு நிலையமொன்றை சுற்றிவளைத்த காவல்துறையினர் , அதன் உரிமையாளரிடம் போதை மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகளை கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர் உடற் கட்டமைப்பு உபகரணங்கள் என்ற போர்வையில் தடை செய்யப்பட்ட இந்த ஊக்க மருந்துகளை அங்கிருந்து இரகசியமாக விற்பனை செய்து வந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.