பாகிஸ்தானை வந்தடைந்த ஈரானின் முக்கிய புள்ளிகள்! முடிவுக்காக காத்திருக்கும் அமெரிக்கா
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான உயர்மட்டத் தூதுக்குழு இஸ்லாமாபாத் வந்தடைந்துள்ளது.
ஈரானின் அதிகாரப்பூர்வ 'பார்ஸ்' (Fars) செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
சபாநாயகர் காலிபாப்புடன் அந்நாட்டின் வெளியுறவுத் அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி அக்பர் அகமதியான், மத்திய வங்கி ஆளுநர் அப்துல்நாசர் ஹெம்மாட்டி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளனர்.
ஈரானின் நிபந்தனை
வழக்கமாக தெஹ்ரானிலிருந்து புறப்படும் ஈரானிய விமானங்கள், சமீபத்திய போர்ச் சூழலில் மெஹ்ராபாத் விமான நிலையம் இலக்கு வைக்கப்பட்டதால், இம்முறை பாதுகாப்புக் கருதி கோர்கான் (Gorgan) நகரிலிருந்து புறப்பட்டு, ஆப்கானிஸ்தான் வான்பரப்பின் வழியாக இஸ்லாமாபாத் வந்தடைந்துள்ளன.
Image Credit: flightradar24
இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தை தொடங்குவது என்பது ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்பதைப் பொறுத்தே அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை
இரண்டு வார கால தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொண்டாலும், ஒருவேளை போர் மீண்டும் தொடங்கினால், "இப்பகுதியில் உள்ள அமெரிக்க நலன்களையும் இஸ்ரேல் அரசையும் மீண்டும் தீக்கிரையாக்குவோம்" எனத் தூதுக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை ஈரான் கடுமையாகச் சாடி வரும் நிலையில், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழுவினரைச் சந்திக்க ஈரானியத் தரப்பு இஸ்லாமாபாத் வந்திறங்கியிருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |