உகண்டாவில் சீனாவின் ஆட்டம் ஆரம்பம் - ஒரேயொரு விமான நிலையமும் பறிபோகும் அபாயம்
ஆபிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள உகண்டா நாடு உலகளவில் ஏழை நாடுகளுள் ஒன்றாக விளங்கி வருகிறது. சீனாவிடம் உகண்டா வாங்கியிருந்த கடனை திருப்பச் செலுத்தாததால் அந்நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தை தற்போது கையகப்படுத்தும் முடிவில் சீனா உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
பொருளாதார பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் உகண்டா, கடந்த 2015ஆம் ஆண்டு வெளிநாட்டிடம் கடன் வாங்க முடிவெடுத்தது. அதன்படி சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. சீன அரசும் உகண்டாவுக்கு கடன் தர சம்மதித்தது. கடனுக்கு ஈடாக எண்டெபெ விமான நிலையம் உள்ளிட்ட சொத்துக்களை அடமானமாக பெறவும் உடன்பாடு ஏற்பட்டது.
அதன்படி உகண்டா அரசின் நிதித்துறை, சிவில் விமான போக்குவரத்துத்துறையினர் சீனாவுக்கு சென்று கடன் பெறுவதற்கான முயற்சியில் இறங்கினர். இதனையடுத்து கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 17 அன்று உகண்டா அரசுக்கும், சீனாவின் எக்ஸிம் (EXIM - Export Import Bank) வங்கிக்கும், இடையே கடன் ஒப்பந்தம் கையெழுத்தானது.
207 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் தொகை எனவும் 20 ஆண்டுகள் கடன் காலம், 7 ஆண்டுகள் கருணை காலம் எனவும் இதற்கு இரண்டு சதவிகிதம் வட்டி என ஒப்புக்கொண்டு இந்த கடன் தொகையை உகண்டாவுக்கு அளித்தது சீன அரசு.
இதனிடையே உகண்டா தனது கடன் தொகையை செலுத்த இயலவில்லை என தெரிகிறது. கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனால் எண்டெபெ விமான நிலையத்தை சீனா கையகப்படுத்திக் கொள்ளலாம் என்பதே இந்த கடன் ஒப்பந்தத்தின் ஆபத்தான ஷரத்தாகும்.
இதனைத்தொடர்ந்து உகண்டா அதிபர் யோவேரி முசேவெனி உயர்மட்ட குழுவினரை சீனாவுக்கு அனுப்பி வைத்தார். அபாயகரமான அந்த ஷரத்தை நீக்கக் கோரி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் சீனா தனது ஒப்பந்த விதிகளை தளர்த்த முடியாது என மறுத்திருக்கிறது.
இதன் மூலம் உகண்டா தனது ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தை சீனாவிடம் இழக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் இந்த கடன் ஒப்பந்தத்தில் எந்த சர்வதேச பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதால் பிற சர்வதேச அமைப்புகளின் உதவியையும் உகண்டா கோர முடியாது என தெரிகிறது.
கடந்த வாரம் உகண்டாவின் நிதியமைச்சர் மதியா கசாய்ஜா சீனாவுடனான கடன் ஒப்பந்த குளறுபடிக்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரியமை குறிப்பிடத்தக்கது.