F35 போர் விமானங்களை வாங்கும் பிரித்தானியா - வரவேற்கும் மார்க் ருட்டே
பிரித்தானியா (UK) அணுகுண்டுகளை தாங்கும் திறனுடைய எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்ய உள்ளமையை நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ருட்டே வரவேற்றுள்ளார்.
குறித்த விமானங்களை அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்யும் பிரித்தானியாவின் இந்த முடிவு பாதுகாப்பு மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாகவும், NATO கூட்டமைப்பின் அணுசக்தி ஒத்துழைப்பு திட்டத்திலும் முக்கிய இடம் பிடிக்கின்றது.
இதன்மூலம், நேட்டோ நாடுகளின் வான்வழி அணுசக்திப் படை மேலும் பலம்பெறும் என போரியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வான்வழிப் பாதுகாப்பு ஏவுகணை
அணுகுண்டுகளைத் தாங்கும் திறனுடைய எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக பிரித்தானியா பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்திருந்தார்.
அத்துடன் சுமார் 95 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான 350 வான்வழிப் பாதுகாப்பு ஏவுகணைகளை, உக்ரைன் அரசுக்கு வழங்குவதாக பிரித்தானியா பிரதமர் தெரிவித்தார்.
குறித்த விடயத்தை நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நோட்டோ அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இதனைக் குறிப்பிட்டார்.
பிரித்தானியா தனது அணு பாதுகாப்பு நிலைப்பாட்டை பலப்படுத்தும் மிகப்பாரிய முயற்சியில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
