அதிரும் மத்திய கிழக்கு! பிரித்தானியாவில் கூடும் அவசரகால கோப்ரா குழு
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் , மத்திய கிழக்கில் ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்ந்துவரும் நிலையில், அரசின் அவசரகால கோப்ரா குழுவை கூட்டியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது என்று குற்றஞ்சாட்டி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதல்களை முன்னெடுத்துள்ளன.
இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கிலுள்ள பல நாடுகளை குறிவைத்து ஏவுகணைகள் ஏவி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
பிரித்தானியாவின் நோக்கம்
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது பிரித்தானியா தாக்குதல்களை முன்னெடுக்கவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

Image Credit: Belfast Telegraph
இதன்படி, பிரித்தானிய அரசு பேச்சாளர் ஒருவர், “பிராந்தியளவில் மேலும் தீவிரமடையும் மோதலை” பிரிட்டன் விரும்பவில்லை என்றும், ஈரானின் அணு முயற்சிகளுக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வை ஆதரிப்பதாகவும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
குடிமக்களின் பாதுகாப்பு
மேலும், தாக்குதல்களுக்கு பின்னர் பிரித்தானியாவின் வெளியுறவு அலுவலகம் இஸ்ரேலுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு எச்சரித்துள்ளது.

இதேவேளை, பஹ்ரைன், கத்தார், மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள பிரித்தானிய தூதரகங்கள், அங்குள்ள தங்கள் குடிமக்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
“இப்போதைய எங்கள் உடனடி முன்னுரிமை, பிராந்தியத்தில் உள்ள பிரிட்டிஷ் குடிமக்களின் பாதுகாப்பாகும்; அவர்களுக்கு 24/7 தூதரக உதவி வழங்கப்படும்,” என அரசு பேச்சாளர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |