இஸ்ரேலுக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை! 20 அம்ச அமைதித் திட்டத்தில் உறுதி
காசா போர்நிறுத்த ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து பிரித்தானிய அதிகாரிகளை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் பரிசீலித்து வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து, அத்தகைய எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளக் கூடாது என பிரித்தானியா இஸ்ரேலை எச்சரித்துள்ளது.
20 அம்ச காசா அமைதித் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும், தங்கள் அதிகாரிகளை வெளியேற்றும் எந்தவொரு நடவடிக்கையும் கூட்டு முயற்சிகளை பலவீனப்படுத்தும் என்றும் பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கண்காணிப்பு மையத்திலிருந்து பிரித்தானியா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகளை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் பரிசீலிப்பதாகக் கூறப்படும் நிலையில், களத்தில் நிலைமையை மேம்படுத்துவதில் தங்கள் பங்கை ஆற்றுவதில் பிரித்தானியா உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்துக்கு பதிலடி
இதனிடையே, போர்நிறுத்த மையத்திலிருந்து இரண்டு நெதர்லாந்து தூதுவர்களை இஸ்ரேல் வெளியேற்றி வருவதாக நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலிருந்து வரும் இஸ்ரேலியப் பொருட்களின் வர்த்தகத்திற்கு நெதர்லாந்து விதித்த தடை மற்றும் பிற நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |