உக்ரைனுக்கு இரண்டாவது முறையாகவும் திடீரென சென்ற பொறிஸ் ஜோன்சன்
உக்ரைனுக்கு திடீரென சென்ற பொறிஸ் ஜோன்சன்
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenksyy) பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜான்சன் (Boris Johnson) சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பானது இன்றைய தினம் (17-06-2022) இடம்பெற்றுள்ளது.
கீவ், உக்ரைனுக்கு எதிரான ரஷ்ய துருப்புக்களின் தீவிர போரானது 100 நாட்களை கடந்தும் முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே செல்கிறது. ரஷ்ய துருப்புக்கள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. இரு நாட்டின் வீரர்களும், பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து உள்ளனர். இந்த போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்பட சில நாடுகள் ஆயுத உதவிகளையும், நிதி உதவியையும் வழங்கி வருகின்றன. போரை நிறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், தங்களை பாதுகாத்து கொள்ளவும் ரஷ்யாவில் இருந்து பல்வேறு பெரிய நிறுவனங்களும் வெளியேறி வருகின்றன.போரானது நீண்ட காலத்திற்கு தொடர கூடிய சூழலும் காணப்படுகிறது.
இந்நிலையில், பிரித்தானியா நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபடுவோர் மற்றும் பணக்கார பிரமுகர்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேற கூடிய சூழலால், அந்நாட்டின் பொருளாதாரத்தின் மீது போரால் ஏற்படும் நீண்டகால சேதம் இன்னும் அதிகரிக்கும் என தெரிவித்து உள்ளது.
பாரியளவிலான பயிற்சி
ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதற்கான விண்ணப்பங்களில் இருந்து, 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் முன்பே அந்நாட்டில் இருந்து கிளம்ப முயற்சித்து உள்ளனர் என தெரிய வந்துள்ளது என்றும் பிரித்தானிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில், உக்ரைன் போரின் நிலைமையை பற்றி இருவரும் விவாதித்தனர்.
இதுபற்றி ஜோன்சன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், உக்ரைன் இராணுவத்தில் உள்ள ஆயிரக்கணக்கான படை வீரர்களுக்கு பயிற்சி அளிக்க கூடிய வகையில் பெரிய அளவிலான பயிற்சியை பிரித்தானியா வழங்க இருக்கிறது என தெரிவித்துள்ளார். உக்ரைனுடன் துணை நிற்போம் என்ற ஹேஷ்டேக்கையும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.