நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணைக! அரச தலைவர் கோட்டாபய அழைப்பு
உள்நாட்டுத் தொழில்துறைகளில் முதலீடுகளைச் செய்து, இலங்கையை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உள்நாட்டு தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோரை சந்தித்து கலந்துரையாடிய போதே அரச தலைவர் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.
இலங்கையின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குத் தனியார் துறையினரின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்நியச் செலாவணியை உருவாக்குதல், அரச நிதிக் கொள்கை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு, முதலீடுகளை ஊக்குவித்தல், ஏற்றுமதியை மேம்படுத்தல், மீள்புதுப்பிக்கத்தக்க சக்திவலு, விவசாய உற்பத்திகள், போதுமானளவு பசளை விநியோகம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இதன்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உள்நாட்டு தொழில்முனைவோர் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு பாராட்டுத் தெரிவித்த அரச தலைவர் , உலகளாவிய தொற்றுப் பரவல் நிலைமைக்கு முகங்கொடுத்துக்கொண்டே பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.