பிரித்தானியாவுக்குள் நூற்றுக்கணக்கான குடியேறிகள் சட்டவிரோதமாக உள்நுழைவு
சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் 430 குடியேறிகள் நேற்று வந்தடைந்தமை பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அண்மைய நாட்களில் ஒரேநாளில் அதிகளவான குடியேறிகள் புகுந்த பதிவாக இது உருவாகியுள்ளது.
ஆங்கிலக்கால்வாயில் நிலவும் வெம்மையான காலநிலையை பயன்படுத்தி ஆபத்தான முறையில் கடலைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் குடியேறிகளின் தொகை அதிகரித்துவருகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை எட்டு படகுகளில் 241 பேர் இங்கிலாந்து கரையை வந்தடைந்த நிலையில் நேற்று 430 குடியேறிகள் கென்டில் கடற்கரைக்கு வந்திறங்கியமை பிரித்தானிய உள்துறை அமைச்சகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று வந்தடைந்த குழுவில் பெண்களும் இளம் சிறார்களும் அடங்கியிருந்தனர். ஒரே நாளில் சிறிய படகுகளில் இவ்வளவு தொகையில் குடியேறிகள் வந்தமை இதுவே முதற் தடவை என பிரித்தானிய உள்துறை பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சட்டவிரோத குடியேற்றத்தின் சிக்கலைச் சமாளிக்க புதிய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ள உள்துறை அமைச்சம், இந்த ஆண்டில் இதுவரை, 345 படகுகளில் 8,000 பேர் இங்கிலாந்தை வந்தடைந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க உள்துறை அமைச்ச பிரிதி படேல் வடிவமைத்துவரும் புதிய சட்டத்தில் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைபவர்களுக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் வகையில் விதிகள் புகுத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த புதிய சட்டத்தை மனித உரிமை அமைப்புகள் கடுமையாக கண்டனம் செய்துள்ளன.