இனவாத ரீதியாக ரிஷி சுனக்கை சீண்டிய ரஷ்ய பத்திரிகை - குடிசைவாசிகள் என கடும் விமர்சனம்!
பிரித்தானியாவின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக்கை ரஷ்யாவின் பிரபல பத்திரிகை ஒன்று குடிசைவாசி என கேவலப்படுத்தியுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரிஷி சுனக் தொடர்பில் அந்தப் பத்திரிகை வெளியிட்டுள்ள கட்டுரையில் 16 புகைப்படங்களை இணைத்துள்ளது. அதுமட்டுமன்றி, ரிஷி சுனக்கின் தாத்தாக்கள் இருவரும் பிரிட்டிஷ் இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த பஞ்சாபியர்கள் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யாவில் இருந்து வெளியாகும் பொருளாதாரம் தொடர்பான பத்திரிகை Kommersant, பிரித்தானிய அரசாங்கத்தின் முதல் கருப்பின பிரதமர் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
ரிஷி சுனக்கின் தந்தைவழி தாத்தா பாட்டியான ராம்தாஸ் மற்றும் சுஹாக் ஆகியோர் தற்போதைய பாகிஸ்தானில் அமைந்துள்ள குஜ்ரன்வாலா பகுதியில் பிறந்தவர்கள். இருவருமே ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர்கள் என்றே கூறப்படுகிறது.
தன்சானியாவில் குடியேற்றம்

இந்த நிலையில் இவர்கள் இருவரும் தான்சானியாவில் பஞ்சாபி இந்தியர்கள் வசித்து வந்த பகுதிக்கு குடியேறினர். தான்சானியாவில் தான் ரிஷி சுனக்கின் தாய்வழி தாத்தா பாட்டி ரகுபீர் மற்றும் ஸ்ரக்ஷா ஆகியோர் பிறந்துள்ளனர்.
இதில் ரகுபீர் புலம்பெயர்ந்தவர் என்பதுடன் ஸ்ரக்ஷா தான்சானியாவில் பிறந்தவர் எனவும் கூறப்படுகிறது. 1960களில் தமது திருமண நகைகளை விற்று பிரித்தானியாவில் குடியேறிய ஸ்ரக்ஷா, அதன் பின்னர் தமது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பிரித்தானியாவுக்கு வரவழைத்துக் கொண்டார்.
அந்தவகையில் பிரித்தானியாவுக்கு குடியேறியவர்கள் தான் ரிஷி சுனக்கின் பெற்றோரான யாஷ்வீர் மற்றும் உஷா தம்பதி. சவுத்தாம்ப்டன் பகுதியில் வசித்து வந்த யாஷ்வீர் மற்றும் உஷா தம்பதிக்கு 1980ல் ரிஷி சுனக் பிறந்தார்.
ரஷ்ய பத்திரிகை விமர்சனம்

யார்ஷ்வீர் அப்போது NHSல் பொது மருத்துவராக பணியாற்றி வந்தார். உஷா மருந்தகம் ஒன்றை நடத்தி வந்தார் எனவும் அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Kommersant பத்திரிகை வெளியிட்ட அந்த கட்டுரையில், 2015ல் அரசியலில் களம் காணும் முன்னர் ரிஷி சுனக் செய்துவந்த பணிகள் குறித்தும் பட்டியலிட்டுள்ளது.
ரிஷி பெரும் கோடீஸ்வரர் என குறிப்பிட்டுள்ள அந்த பத்திரிகை, மொத்த சொத்துமதிப்பு 730 மில்லியன் பவுண்டுகள் என குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுக்கு எதிரான செயற்பாடுகளை பிரித்தானியா எடுத்திருப்பதாலையே குறித்த பத்திரிகை ரிஷி சுனக்கை இனவாத ரீதியாக சீண்டியுள்ளது.
இதனிடையே, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, புதிய பிரத்தானிய பிரதமரை வரவேற்றுள்ளதுடன், உதவிகள் தொடரும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.