சஜித் பிரேமதாச நாட்டு மக்களின் இதயத்துடிப்பை அறிந்தவர் - உதயகுமார்
நாட்டு மக்களின் இதயத்துடிப்பை அறிந்தவர் சஜித் பிரேமதாச எனவும் மலையக மக்களின் இதயத்துடிப்பை தெரிந்தவர் பழனி திகாம்பரம் எனவும் இப்படியான தலைவர்களே நாட்டை ஆள வேண்டும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் ( M.Udayakumar) தெரிவித்துள்ளார்.
ஹட்டன் மல்லியப்பு புருட்ஹில் பகுதியில் ஏற்படுத்தப்பட்ட புதிய வீடமைப்பு திட்டத்திற்கான மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
"மலையக மக்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியாக மட்டும் அல்ல, சமூக ரீதியாகவும் நாம் ஒன்று படவேண்டும். கடந்த காலங்களில் எமது மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. இதனால் தான் சமூகம் பின்தங்கிய நிலையில் இருந்தது.
எனினும் தலைவர் திகாம்பரம் அமைச்சரான பின்னர் மலையகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தார். தனி வீடுகளை அமைத்துக்கொடுத்தார். நூலகங்கள் அமைக்கப்பட்டன. கலாசார மண்டபங்கள் நிறுவப்பட்டன. காணி உரிமை கிடைத்தது.
எனவே திகாம்பரம் போன்ற தலைவர்கள் எமக்கு கிடைத்தமை வரமாகும். அவர் வழியில் பயணித்து மாற்றத்தை ஏற்படுத்துவோம். மலையக மக்களுக்கு பிரஜா உரிமை கிடைக்கப்பெற்றிருந்தாலும் உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் வீட்டுரிமை மற்றும் காணி உரிமையை திகாம்பரமே பெற்றுக்கொடுத்தார்.
ஆட்சிகள் மாறினாலும் மக்களுக்கான சேவைகள் மாறக்கூடாது. ஆனால் இந்த ஆட்சியின் கீழ் மலையக மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை. திகாம்பரம் கட்டிய வீடுகள் குருவிக்கூடு என்றார்கள். இன்று அதைக்கூட கட்டுவதில்லை.
தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஆளுந்தரப்பால் மீறப்பட்டுள்ளன. மலையக மக்கள் அநாதவராக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மாவட்டத்துக்கு கிடைத்த பிரதேச செயலகங்கள் கூட பறிக்கப்பட்டுள்ளன. உப அலுவலகங்களே திறக்கப்படுகின்றன. கிடைத்த உரிமையையும் இழந்துள்ளனர்.
இப்படியான தலைமைத்துவம் வேண்டுமா? எனவே எமது கஷ்ட நஷ்டங்களை புரிந்த தலைவர் தான் எமக்கு வேண்டும் என தெரிவித்துள்ளார்.