கொழும்பு மாநகர மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
காவல்துறை பதிவுப் படிவங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கொழும்பு மாநகர மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று (8) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்டகாவல்துறை நிலையங்களினால், வீடு வீடாக கொண்டு வரப்படுவதாக கூறப்படும் காவல்துறை பதிவு படிவங்களை நிரப்பிக் கொடுக்க வேண்டாம்.
காவல்துறை பதிவு படிவங்கள்
இதுபற்றி சட்டம் ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ், காவல்துறை மா அதிபர் விக்ரமரத்ன ஆகியோருக்கு அறிவித்துள்ளேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டு உடன் நிறுத்துவதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர்.
அதிபரின் பிரதம செயலாளர் சமன் இதுபற்றி பொறுப்பில் உள்ள சகலருக்கும் அறிவிப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளார்.
காவல்துறையினருக்கு அல்ல, எந்த ஒரு அரச நிறுவனத்துக்கும், தனிப்பட்ட வீட்டு தகவல்களை கொடுக்க நாம் விரும்பமாட்டோம். கொடுத்தால் அது எங்கெங்கு போகும் என எனக்கு தெரியும்.
காவல்துறை இராஜ்ஜியம் அல்ல
இது ஒரு காவல்துறை இராஜ்ஜியம் அல்ல. காவல்துறை சட்டத்தில் பதிவு செய்ய இடம் இருக்கிறது. அது எனக்கு தெரியும். ஆனால், அதை விசேட அவசர காலங்களிலேயே பயன்படுத்த வேண்டும்.
எங்காவது சட்டத்தை மீறுபவர்கள் இருப்பார்கள் எனில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யுங்கள். விசாரியுங்கள். அதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை” என்றார்.
